ஈழத்தில் சிங்கள குடியேற்றத்தை நிறுத்துக - வீரமணி வலியுறுத்தல்
தஞ்சாவூர்: ஈழத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே சிங்களர்களை குடியேற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இது குறித்து இந்திய அரசு, இலங்கைக்கு கடுமையான எச்சரிக்கை வழங்க வேண்டும் என திராவிட கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
திராவிட கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று தஞ்சாவூரில் நடந்தது. இதில் அந்த அமைப்பின் தலைவர் வீரமணி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் கூறுகையில்,
வரும் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இதில் ஜாதி வாரியான புள்ளி விவரங்களையும் எடுக்க வேண்டும்.
இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் வாழ்வுரிமையும் கேள்விக்குறியாக உள்ளது. முள்வேலி முகாம்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக மக்கள் விலங்குகளை போல முடக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடிப்படை தேவைகள் கூட நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவர்களை ஒவ்வொரு நொடியும் மரண வேதனையில் துடிக்க செய்யும் சிங்கள அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழர்களின் பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றும் திட்டத்தை அதிபர் ராஜபக்சே செயல்படுத்தும் நிலையில், இந்திய அரசு கடுமையான அழுத்தம் கொடுத்து எச்சரிக்க வேண்டும்.
மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு...
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். கச்சத்தீவை மீண்டும் மீட்பது உள்ளிட்ட தமிழக மீனவர்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பினை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இலங்கை அகதிகள் முகாம் மிருகக்காட்சியல்ல, எல்லோரும் பார்க்க என்று ஆணவமாக பேசிய இலங்கை துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்ற வேண்டும்.
திருமாவளவனும் சென்றுள்ளார்...
இலங்கைக்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் காங்கிரஸ், திமுகவினர் தான் சென்றுள்ளனர் என்று கூறுவது சரியல்ல. இந்த குழுவில் திருமாவளவன் சென்றுள்ளார்.
டெல்லிக்கு அனைத்துக்கட்சி சார்பில் தூதுக்குழுவாக சென்ற போது, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர். அப்போது யாரும் வரவில்லை. இலங்கைக்கு செல்லும் பட்டியலை மத்திய அரசு தான் முடிவு செய்யும். கருணாநிதி முடிவு செய்யவில்லை என்றார்.