2ம் நிலை நகரங்களில் ஐ.டி-தமிழகம் தீவிரம்
சென்னை: இரண்டாம் நிலை நகரங்களில் தொழில் முதலீட்டை அதிகப்படுத்த பெரிய நிறுவனங்களை மட்டும் நம்பாமல் நடுத்தர நிறுவனங்களையும் ஊக்கப்படுத்த ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.
இதன் முதல் கட்டமாக நடுத்தர ஐடி நிறுவனங்களுக்கு தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் கணிசமான நிலத்தை ஒதுக்கியுள்ளார் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இப்போதைக்கு 11 தொழில் நுட்ப நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திருச்சியில் வரும் அக்டோபர் 22ம் தேதி நடக்கும் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டல திறப்பு விழாவில் இந்த நில ஒதுக்கீட்டுக்கான கடிதங்களை ஸ்டாலினிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள் இந்த நிறுவனத்தினர். இவர்களைத் தவிர மேலும் பல ஐ.டி. நிறுவனங்களுக்கும் நிலங்கள் ஒதுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி தவிர, சேலம், நெல்லை, கோவை, ஓசூர், மதுரை, சோழிங்கநல்லூர் ஆகிய நகரங்களில் 9 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குகிறது எல்காட். இங்கெல்லாம் இரண்டாம் கட்ட ஐடி நிறுவனங்கள் பலவற்றின் கிளைகள் அமைய முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு.