நாகை எஸ்.பிக்கு தபால் குண்டு மிரட்டல்
நாகப்பட்டிணம்: நாகப்பட்டிணம் காவல்துறை கண்காணிப்பாளருக்கு தபால்மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
நாகப்பட்டிணம் காவல்துறை கண்காணிப்பாளராக இருப்பவர் மகேஷ்வர் தயாள். இவருக்கு இன்று தபாலில் ஒரு பார்சலும், கடிதமும் வந்தது.
அந்த கடிதத்தை பிரித்து பார்த்த போது அதில், பார்சலை கவனத்துடன் பிரிக்கவும் அதில் வெடிகுண்டு இருக்கிறது. மேலும் கடல் வழியாக லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் ஊடுருவியுள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இந்த பார்சல் லஷ்கர்-இ-தொய்பாவின் பெயரில் வந்துள்ளது. இதையடுத்து போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் அந்த பார்சலை பிரித்து பார்க்கையில் அதில் சிகரெட் அட்டையில் வயர்கள் இணைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து யாரோ பரபரப்பு ஏற்படுத்த வேண்டுமென்றே நோக்கில் இதை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.