மகாராஷ்டிரா, ஹரியாணாவில் மீண்டும் காங். வெல்லும்- கருத்துக் கணிப்பு
டெல்லி: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியி்ட்டுள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியாணா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் நேற்று சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் மகாராஷ்டிராவில் எந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது. இதனால் தொங்கு சட்டசபை உருவாகலாம் என கருதப்பட்டது.
ஆனால், தேர்தலுக்கு பின்னர் சிஎன்என்-ஐபிஎன் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் நடத்தப்பட்ட இந்த எக்ஸிட் போல் முடிவு விவரம்:
மொத்தமுள்ள 288 தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி 135 முதல் 145 இடங்களை கைப்பற்றும். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 75 முதல் 85 இடங்களும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 55 முதல் 65 தொகுதிகளும் கிடைக்கும். இது கிட்டதட்ட கடந்த 2004 தேர்தல் முடிவுகளை போல் தான் இருக்கும்.
பாஜக-சிவசேனா கூட்டணிக்கு 105 முதல் 115 இடங்களே கிடைக்கும். இதில் சிவசேனா 55 முதல் 65 இடங்களையும், பாஜக 45 முதல் 55 இடங்களையும் கைப்பற்றும்.
ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சிக்கு 8 முதல் 12 சீ்ட்கள் வரை கிடைக்கும். மற்றவர்கள் 25 முதல் 35 தொகுதிகளில் வெற்றி பெறுவர் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் நியூஸ் கருத்துக் கணிப்பு:
அதே போல ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரசுக்கு 89, தேசியவாத காங்கிரசுக்கு 48 தொகுதிகளும் என அந்த கூட்டணிக்கு 137 இடங்கள் கிடைக்கும் என்றும் பாஜக 51, சிவசேனா 62 தொகுதிகளில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் 57 இடங்களில் வென்று தனித்து ஆட்சியமைக்கும் என ஸ்டார் நியூஸ் தெரிவித்துள்ளது.