இலங்கை: சோனியாவிடம் காங். குழு அறிக்கை
திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பிக்கள் குழு 5 நாள் இலங்கை பயணம் மேற்கொண்டு முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கை அளித்தது.
இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பிக்கள் சுதர்சன நாச்சியப்பன், கே.எஸ். அழகிரி, என்.எஸ்.வி. சித்தன், ஜே.எம். ஆருண் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவுடன் ஆலோசனை நடத்தினர்.
அதில், குழு அறிக்கையை சோனியா மற்றும் பிரதமரிடம் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
'ராஜபக்சேவுக்கு அறிமுகமான ஒரே நபர் திருமா'..
இந் நிலையில் இக் குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பி. அழகிரி அளித்துள்ள ஒரு பேட்டியில்,
முகாம்களில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் தங்கள் சொந்த இடத்துக்கு செல்வதையே விரும்புகின்றனர். அதே போல் இந்தியாவால் மட்டும்தான் இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
அவர்களது குறைகளையும் அதிபர் ராஜபக்சேவிடம் எடுத்துக் கூறினோம். அவற்றை நிறைவேற்றுவதாகவும் அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பதாகவும் ராஜபக்சே தெரிவித்தார்.
இந்த விவரங்களை எல்லாம் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரிடம் எடுத்துக் கூற உள்ளோம்.
இலங்கையில் நம்ம ஊர் எதிர்க்கட்சிகளை போல் இல்லாமல் ரணில் தலைமையிலான எதிர்க்கட்சி சிறப்பாக செயல்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுங்கள். உங்கள் வருகையால் அவர்களது வாழ்வில் வசந்தம் வீச வேண்டும் என்று பொறுப்பை உணர்ந்து ரணில் பேசினார்.
மேலும் விரைவில் இலங்கையில் அதிபர் தேர்தல் வர இருக்கிறது. தமிழர்கள் தொடர்ந்து முள்வேலி முகாம்களில் இருந்தால் ராணுவத்தை வைத்து மிரட்டி 2.5 லட்சம் தமிழர்களின் ஓட்டுக்களையும் ராஜபக்சே தனக்கே போட்டுக் கொள்வார். எனவே உடனடியாக அங்கிருந்து தமிழர்களை அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.
இலங்கையில் மலையக தமிழர்களை சந்தித்தபோது அவர்கள் யாழ்ப்பாண தமிழர்களால் பட்ட துன்பத்தை குறையாகத் தெரிவித்தனர். எங்களை தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்றும், அவர்கள் நிரந்தர குடிமக்கள் என்றும் மதிப்பு குறைவாக நடத்தினார்கள் என்று ஆதங்கப்பட்டனர்.
எங்கள் குழுவில் இடம் பெற்றிருந்த எம்.பிக்களில் ராஜபக்சேவுக்கு அறிமுகமான ஒரே நபர் திருமாவளவன் மட்டும்தான்.
ராஜபக்சேவுக்கு முதல்வர் கருணாநிதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் ஒன்றை கனிமொழியிடம் கொடுத்து அனுப்பியிருந்தார். அதை அவர் ராஜபக்சேவிடம் வழங்கினார்.
ராஜபக்சே அனைத்து எம்.பிக்களுக்கும் பரிசுப் பொருட்களை கொடுத்தார். எனக்கு தரப்பட்ட பரிசுப் பொருளில் கப் அன்ட் சாசர்கள் இருந்தன என்று கூறியுள்ளார் அழகிரி.