அதிகமான மின்வெட்டு-அஞ்ச வேண்டாம்: மின்வாரியம்!
சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிக்கும் என அஞ்ச வேண்டாம் என்று மின்வாரியம் கூறுகிறது.
மின்வெட்டு அதிகரிக்கும் போதெல்லாம் தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்றும், காற்று வீசவில்லை அதனால் கொஞ்சம மின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அரசு சப்பை கட்டு கட்டுவது வழக்கமே.
தமிழகத்தில் 2,000 மெகாவாட் அளவுக்கு மின்சார பற்றாக்குறை நிலவி வருகிறது. இந் நிலையில் மத்திய, மாநில அரசுகளின் சில மின் நிலையங்கள் பராமரிப்புக்காக மின் உற்பத்தியை நிறுத்திவிட, காற்றாலை மின் உற்பத்தியும் கடந்த வியாழக்கிழமை 13 மெகாவாட் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.
இதனால் திடீரென மேலும் 600 மெகாவாட் அளவுக்கு மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் தமிழ்ந்டு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழ்நாடு மின் வாரியத்தின் புனல், அனல், எரிவாயு, தனியார் மின் உற்பத்தி நிலையங்கள், காற்றாலை மின் உற்பத்தி, மத்திய மின் உற்பத்தி நிலையங்களின் தமிழ்நாட்டிற்கான பங்கீடு, தேவைக்கேற்ப மின்சந்தை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் வணிகர்களின் மூலமாகவும் மின் கொள்முதல் செய்தும் மின் தேவை மேலாண்மை மூலமாகவும் மின் பற்றாக்குறை ஈடுகட்டப்படுகிறது.
காற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் வானிலை ஆராய்ச்சி மையத்தின்படி அக்டோபர் மாதம் 20ம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதைப் பொறுத்து தமிழக மின்சார வாரியம் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மின் உற்பத்தி சாதனங்களின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி தூத்துக்குடி அனல் மின்நிலையத்திலும் நெய்வேலி அனல் மின் நிலையத்திலும் மொத்தமாக 840 மெகாவாட் அளவிற்கு உற்பத்தி நிறுத்தப்பட்டது.
காற்றாலை மூலம் சராசரியாக கிடைத்து வந்த 1500 மெகாவாட் மின் உற்பத்தியில் 10ம் தேதி திடீரென்று ஏற்பட்ட மின் இழப்பினால் 10, 11 மற்றும் 12ம் தேதிகளில் சற்று அதிகமாக மின்தடை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
உடனடியாக மின்வாரியம், பராமரிப்பு பணிகளிலிருந்த உற்பத்தி நிலையங்களின் வேலைகளை துரிதப்படுத்தி உடனடியாக இயக்கத்திற்கு கொண்டு வந்தது.
மேலும் கேரளாவிலிருந்து 150 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் பெறப்பட்டது. மத்திய மின் அமைச்சகத்திடமிருந்து 125 மெகாவாட் மின்சாரம் திரும்ப பெறப்பட்டது.
காற்றாலைகள் மூலம் ஏற்பட்ட பற்றாக்குறையை சரிசெய்ய தன்னார்வ மின் உற்பத்தியாளர்களிடமும், மின்சந்தை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் வணிகர்களின் மூலமாகவும், மின்கொள்முதல் செய்து மின் தேவையை வாரியம் பூர்த்தி செய்து வருகிறது.
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்படி பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஆகையால் தமிழக மக்கள் தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாகும் என அஞ்ச வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.