மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்-ராமதாஸ் கடும் எதிர்ப்பு
சென்னை: மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காயை (BT brinjal) வணிக ரீதியாக பயிரிடுவதற்கு அனுமதியளித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் ஏற்பளிப்பு குழுவின் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கத்திரிக்காயைத் தொடர்ந்து அரிசி, சோளம், வெண்டைக்காய் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கும் மரபணு மாற்றம் செய்து பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட இருக்கிறது.
இப்படி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் சந்தைக்கு வர தொடங்கிவிட்டால், பெரும் ஆபத்து ஏற்படும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காயை வணிக ரீதியாக பயிரிடுவதற்கு தமது துறையின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் அங்கீகாரக்குழுவின் மூலம் திடீரென மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் அனுமதி அளித்திருக்கிறார்.
இந்த அங்கீகார நடைமுறைக் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
மேலும், பி.டி. கத்திரிக்காயின் பாதிப்புக் குறித்து மரபணு பொறியியல் ஏற்பளிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள வேளாண் பொறியாளர்கள் எச்சரிப்புச் செய்து தங்களது ஆட்சேபனைகளையும், எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களது எச்சரிப்பும், எதிர்ப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் வணிக ரீதியாக பயிரிடப்பட்டு விற்பனைக்கு வந்து அவற்றை மக்கள் தங்களது அன்றாட உணவில் பயன்படுத்தினால் பக்கவாதம், கேன்சர், பார்க்கின்சன் நோய் உள்ளிட்ட மோசமான பக்க விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளால் தடை விதிக்கப்பட்ட பொருட்களுக்கு அமெரிக்காவின் உதவித் திட்டத்தின் ஒரு பகுதி என்ற போர்வையில் இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டு மக்கள் மீது திணிக்கப்படுகிறது.
இதனால், நமது நாட்டின் விவசாய உற்பத்தி முறை இனி முற்றிலுமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கும், மான்சாண்டோ, மஹிகோ போன்ற ஏகபோக பன்னாட்டு விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் தள்ளப்பட்டு விடும்.
அதன்பிறகு உணவு உற்பத்தியில் இந்தியா தனது சுயசார்பு சிந்தனையை முற்றிலும் இழக்கும் ஆபத்திற்குள் தள்ளப்பட்டுவிடும்.
மரபணு மாற்றம் செய்யப்படும் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை அனுமதிப்பது என்பது மிகவும் ஆபத்தானது. பொது நலனுக்கு தீங்கானது. நமது நாட்டின் விவசாயத்தின் எதிர்காலத்தையும், விவசாயிகளின் நலனையும் பன்னாட்டு விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் தள்ளிவிடும் ஆபத்தை எப்பாடுபட்டேனும் தவிர்க்கவேண்டும்.
இந்த ஆபத்தைச் சுட்டிக்காட்டியும், மரபணு மாற்றம் செய்யப்படும் கத்திரிக்காய் மற்றும் பல்வேறு விளைப்பொருட்களின் விதைகளை அனுமதிப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்று வலியுறுத்தியும், மரபணு பொறியியல் ஏற்பளிப்புக் குழுவின் அறிக்கையை அரசு ஏற்பதற்கு முன் அதனை பொதுமக்களின் விவாதத்திற்கு வெளியிடவேண்டும் என வலியுறுத்தியும்,
பொது விவாதமின்றி இதுபோன்ற முக்கிய முடிவுகளை நாட்டின் மக்கள் மீது திணிக்கக் கூடாது என்று நமது எதிர்ப்பினை தெரிவிக்கவும், இந்த ஆபத்தை உரிய முறையில் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி தடுத்திட மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தியும் 26ம் தேதி தமிழக உழவர் பேரியக்கத்தின் சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
என்னுடைய தலைமையில் நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உழவர் சங்கப் பிரதிநிதிகளும், விவசாயிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications