ஐஐடி நுழைவு தேர்வு-பிளஸ் டூவில் 80% மார்க் அவசியம்
டெல்லி: ஐஐடியில் சேர நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான தகுதி மதிப்பெண்ணை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் சேர நுழைவுத் தேர்வில் பங்கேற்க 12ம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தற்போது தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை 80 முதல் 85 சதவீதமாக உயர்த்த மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது. 2011-வது கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் என்று அத் துறையின் அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
ஐஐடிகள் தொடர்பான ஆய்வுக் குழுவின் கூட்டம் டெல்லியில் நடந்தது. இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கபில்,
இந்திய ஐஐடிக்கள் சர்வதேச தரம் வாய்ந்தவை. இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.
இதனால் ஐஐடியில் சேர நினைக்கும் மாணவர்கள் பிளஸ் டூ மதிப்பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நுழைவுத் தேர்வுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
இதனால் தான் நாடு முழுவதும் ஏராளமான நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் முளைத்துள்ளன. ஐஐடியில் சேர்வதற்கு இதுபோன்ற பயிற்சி மையங்களை மாணவர்கள் சார்ந்திருக்கும் நிலை மாற வேண்டும்.
இதற்காகத்தான் நுழைவுத் தேர்வைவிட மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுகுறித்து ஆய்வு செய்ய ஐஐடி இயக்குனர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஆய்வு நடத்தி தனது பரிந்துரை அறிக்கையை 3 மாதங்களுக்குள் அளிக்கும்.
ஐஐடிக்களை சீரமைக்க அணுசக்திக் கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஐஐடிகளில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது, தேசிய வளர்ச்சித் திட்டங்களில் ஐஐடியின் பங்கு ஆகியவை குறித்து ககோட்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்து 6 மாதங்களில் அறிக்கை அளிக்கும்.
ஐஐடிகளில் ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என்றார் சிபல்.