இந்தியாவில் நீரிழிவு நோய் பூதாகரமாக உருவெடுக்கும் அபாயம்
மான்ட்ரீல்: உலகிலேயே சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவு நோய் பெருமளவில் வெடித்துக் கிளம்பும் அபாயம் உருவாகியிருப்பதாக மான்ட்ரீலில் நடந்து வரும் 20வது வருடாந்திர உலக நீரிழிவு நோய் மாநாடு எச்சரித்துள்ளது.
சர்வதேச நீரிழிவுக் கழகம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. மாநாட்டின்போது நீரிழிவுக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் தற்போது 5.8 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 4.32 கோடி பேரும், அமெரிக்காவில் 2.68 கோடி பேரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டில் இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6 கோடியாக அதிகரிக்கும்.
2030ம் ஆண்டு வாக்கில் இந்திய வயது வந்தோர் மக்கள் தொகையில் 8.4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கும். நகர்ப்புறமயமாக்கல், வாழ்க்கை முறையே இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரச் சுமையும் பெருமளவில் அதிகரிக்கும். அடுத்த ஆண்டில், நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்காக இந்தியா 2.8 பில்லியன் டாலர் அளவுக்கு செலவிடும்.
உலக அளவில் மிக முக்கிய நோய்கள் வரிசையில் மாரடைப்பு, புற்றுநோய், காசநோய் ஆகியவற்றுடன் தற்போது நீரிழிவு நோயும் இணைந்துள்ளது. உலக அளவில் 60 சதவீதம் பேர் இந்த நோய்களில் ஒன்றால்தான் மரணத்தைத் தழுவுகின்றனர்.
கடந்த 2007ம் ஆண்டு உலக அளவில் நீரிழிவு நோய் தாக்கிய புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 70 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு அது 1 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.