ஜார்க்கண்ட் சட்டசபை கலைப்பு-கேபினட் ஒப்புதல்
டெல்லி: குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபையைக் கலைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 9 மாதங்களாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் சட்டசபை கலைக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரி வந்தன.
இந்த நிலையில் 3 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள் ப.சிதம்பரம், அம்பிகா சோனி ஆகியோர் கூறுகையில்,
குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வந்த ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவையை கலைக்க மாநில ஆளுநர் கே.சங்கரநாராயணன் அளித்த பரிந்துரையை அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவரின் முறையான ஒப்புதலுடன் இது நடைமுறைக்கு வரும்.
இதனால், அங்கு விரைவில் தேர்தல் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுகொள்ளப்படும் என்றனர்.
கடந்த ஜனவரி 19ம் தேதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து அங்கு சட்டசபை முடக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.