மீண்டும் தமிழகம் முழுவதும் பரவும் சிக்குன் குனியா

மாவட்ட அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இந்த நோய் தாக்கப்பட்டதால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறையே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சில மாதங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சிக்குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருந்தனர்.
ஆனால் மோசமான காலநிலை, மாசடைந்த நிலத்தடி நீர் போன்றவை காரணமாக சிக்குன் குன்யா வைரஸ் வேகமாக பெருகத் துவங்கியிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ் கூறுகையில், "தமிழகத்தின் பல பகுதிகளில் சிக்குன் குனியா நோயால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். இது வைரஸ் காய்ச்சல்தான். மோசமான சுற்றுச் சூழல் காரணமாகவே இந்த வகை வைரஸ்கள் வேகமாகப் பரவுகின்றன.
சிக்குன் குன்யா நோயைக் கட்டுப்படுத்த ரூ.3.6 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 10 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஐந்து நவீன கொசு ஒழிப்பு இயந்திரங்கள், 45 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கொசு மருந்து அடிக்க 9,000 ரூபாய் செலவழிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
கொசுக்கடியை தவிர்க்க, இரவு வெள்ளை நிற ஆடை அணிய வேண்டும், கால் வெளியே தெரியாமல் போர்த்திக் கொள்ள வேண்டும், காய்ச்சல் வந்தால் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆனால் இந்த நடவடிக்கைகள் பரவலாக எடுக்கப்படுவதில்லை என்றும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கொசு மருந்து அடிக்கப்படுவதெல்லாம் வெறும் அறிவிப்புதான் என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏடிஸ் வகை கொசுக்களால் தான் இந்த நோய் பரவுவது குறிப்பிடத்தக்கது.
சென்னை மற்றும் புறநகர்களில் பெருகும் நோயாளிகள்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்தான் மிக அதிக அளவு சிக்குன் குனியா நோயாளிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது தவிர, சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் ஏராளமானோர் சிக்கன் குனியா தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications