ஜெயப்பிரதாவுக்கு நிலம் கொடுத்த அமிதாப்-புது சர்ச்சை

உ.பி. மாநிலம் லக்னோ அருகே உள்ள பாராபங்கி மாவட்டம் தெளலத்பூர் என்ற கிராமத்தில், நிலம் வாங்கியிருந்தார் அமிதாப் பச்சன். விவசாயி என்று கூறி இந்த நிலத்தை வாங்கியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
விவசாயி என்று அமிதாப் பச்சனைக் காட்டுவதற்காக போலியான ஆவணங்களைக் காட்டி நிலத்தை வாங்கியுள்ளனர். இந்த நிலம் ஏழைகளுக்காக கொடுக்கப்படுவதற்காக கிராமத் தலைவர் ராஜ்குமார் சிங் மற்றும் அவரது குடும்பத்தினரால் அரசுக்குத் தானமாக கொடுக்கப்பட்டதாகும்.
ஆனால் முந்தைய முலாயம் சிங் யாதவ் ஆட்சியின்போது போலியான ஆவணங்களைக் காட்டி அமிதாப்பச்சன் இந்த நிலங்களை வாங்கி விட்டார் என்பதுதான் பிரச்சினையே.
இதையடுத்து உள்ளூர் பஞ்சாயத்திடமே நிலத்தைத் திருப்பித் தந்து விடுவதாக அவர் முதல்வர் மாயாவதிக்கு கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி கடிதம் எழுதினார். அமிதாப் சார்பாக அவரது பிரதிநிதியான வினய் சுக்லா என்பவர் இந்தக் கடிதத்தை எழுதினார்.
இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கு தனது மருமகள் ஐஸ்வர்யா ராய் பெயரில் மகளிர் கல்லூரி ஒன்றைத் தொடங்கப் போவதாக அமிதாப் பச்சன் அறிவித்தார்.
ஆனால் தற்போது தடாலடியாக நடிகையும், சமாஜ்வாடி கட்சி எம்.பியுமான ஜெயப்பிரதாவின் நிஷ்தா பவுண்டேஷன் அமைப்புக்கு இந்த நிலத்தைத் தானமாக கொடுத்துள்ளார் அமிதாப் பச்சன்.
இதையடுத்து உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் ராஜ்குமார் சிங் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்குமாரின் மகன் முன்னா சிங் கூறுகையில், மகளிர் கல்லூரி தொடங்கப் போவதாக அறிவித்த அமிதாப் பச்சன் குடும்பத்தினர் அதற்காக இங்கு அடிக்கல் நாட்டினர். இதில் அமிதாப் பச்சன் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அமர் சிங் வந்தார், முலாயம் சிங் வந்தார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும் வந்தார். ஆனால் அதன் பின்னர் ஒரு வேலையும் நடக்கவில்லை.
இந்த நிலையில் அமிதாப்பின் புதிய பிரதிநிதியான ராஜேஷ் ரிஷிகேஷ் யாதவ் என்பவர் அக்டோபர் 23ம் தேதியன்று அனைத்து ஆறு பிளாட்டுகளையும் ஜெயப்பிரதாவின் அறக்கட்டளைக்கு மாற்றிக் கொடுத்து விட்டார். இதுதொடர்பான பத்திரங்களையும் ஜெயப்பிரதாவின் செயலாளர் தேவேந்திர குமாரிடம் ஒப்படைத்துள்ளார் என்றார்.
இந்தப் புகார் குறித்து விரிவாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில கூடுதல் டிஜிபி பிரிஜ் லால் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது பிரச்சினை பெரிதாவதைத் தொடர்ந்து ஜெயப்பிரதாவின் அறக்கட்டளையின் செயலாளர் தேவேந்திர குமார் சிங், இந்த நிலத்தை ஜெயப்பிரதா அறக்கட்டளை கிராமப் பஞ்சாயத்திடேம வழங்கப் போவதாகவும், அதுதொடர்பான நடவடிக்கைகளை அது தொடங்கி விட்டதாகவும் பெரும் பல்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அப்படி ஒரு கடிதம் வரவே இல்லை என்று கலெக்டர் கூறி விட்டார்.












Click it and Unblock the Notifications