இலங்கையின் கச்சா எண்ணெய் - அகழ்வுக்கு ரஷ்யா ஆர்வம்
கொழும்பு: இலங்கையில், கச்சா எண்ணெய் இருப்பு குறித்து ஆர்வம் காட்டியுள்ள ரஷ்யா, அதன் அகழ்வுப் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையே 1957ம் ஆண்டு தூதரக உறவுகள் ஏற்பட்டன. ஆனால் அன்று முதல் இதுவரை ஒரு வெளியுறவு அமைச்சர் கூட இலங்கைக்கு வந்ததில்லை.
இந்தநிலையில் முதன் முறையாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்வி லவ்ரோவ் கொழும்புக்கு விஜயம் செய்தார். இவர் முன்பு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றியவர். சிங்களம் பேசத் தெரிந்தவர்.
கொழும்பு வந்த லவ்ரோவ், ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகல்லகாமாவையும் சந்தித்துப் பேசினார்.
லவ்ரோவின் வருகை குறித்து இலங்கை வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மன்னார் வளைகுடாப் பகுதியில் உள்ள எண்ணெய் வளம் குறித்து ஆராய விருப்பம் கொண்டுள்ளதாக லவ்ரோவ் தெரிவித்தார். மேலும், சபுஸ்கந்தா எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தை புதுப்பித்துத் தரவும் ரஷ்யா ஆர்வமுடன் இருப்பதாகவும் லவ்ரோவ் தெரிவித்தார்.
இலங்கை இனப் போரின்போது ரஷ்யா, இலங்கைக்குக் காட்டிய ஆதரவுக்கும், உதவிகளுக்கும் அப்போது ரோஹித பொகல்லகாமா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சர்வதேச அளவில், இலங்கைக்கு உறுதுணையாக இருந்ததற்காக ரஷ்யாவுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம் என்று லவ்ரோவிடம் பொகல்லகாமா தெரிவித்தார்.
பின்னர் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய லவ்ரோவ், இலங்கையுடன் வர்த்தகம், கலாச்சாரம் ஆகியவற்றில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள ரஷ்யா ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், ரஷ்யர்கள் சிலோன் டீயை விரும்பி சாப்பிடுகிறார்கள். இலங்கையிலிருந்து அதிக அளவில் டீத் தூள் இறக்குமதி செய்வது ரஷ்யாதான். இதேபோல மேலும் பல பொருட்களை இலங்கையிலிருந்து இறக்குமதி செய்ய ரஷ்யா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார் என்றார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில், 1 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் அளவுக்கு அகழ்வின் மூலம் எடுக்கலாம் என்று முன்பு ஒருமுறை இலங்கை பெட்ரோலியத்துறை அமைச்சர் பெளசி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நார்வே நிறுவனம் ஒன்று புள்ளிவிவரத் தகவல்களைத் தந்திருப்பதாகவும், இவற்றை மூன்று பகுதிகளாக அகழ்ந்தெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இலங்கையில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ரஷ்யா ஆர்வம் காட்டியுள்ளது. ஆனால் ஏற்கனவே இந்தியா மற்றும் சீனாவிடம் இதுதொடர்பான பணிகளை இலங்கைக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தமிழர்களுக்கு எதிரான போரின்போது, ஐ.நா. அளவில், இலங்கைக்கு எந்தவித சிக்கலும் வந்து விடாமல் பார்த்துக் கொண்ட நாடுகளில் ரஷ்யாவும் முக்கியமானது என்பதால், ரஷ்யாவுக்கும் எண்ணெய் எடுப்பதில் பங்களிக்க இலங்கை முன்வரலாம் எனத் தெரிகிறது.
மன்னார் வளைகுடாப் பகுதியில் எட்டு இடங்களில் எண்ணை இருப்புக்கு வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில், 2 இடங்களை இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இலங்கை தந்துள்ளது. தற்போது 3 இடங்களில் அகழ்வுப் பணிக்கு டெண்டர் கோரவுள்ளது.