ஹைகோர்ட் மோதல்-4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் மோதல் மூண்டது.
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி மீது முட்டை எறிந்து தாக்குதல் நடத்திய வக்கீல்களைக் கைது செய்ய போலீஸார் சென்றதைத் தொடர்ந்து அவர்களைத் தடுத்து கைதான வழக்கறிஞர்களை மீட்க மற்ற வக்கீல்கள் திரண்டு வந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. போலீஸார் தடியடியில் இறங்கினர். வக்கீல்களும் கல்வீச்சில் குதித்தனர். இரு தரப்பும் நடத்திய சண்டையைப் பார்த்து நாடே அதிர்ந்து போனது.
இந்த சம்பவத்தில் இருதரப்பிலும் காயம் அடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதற்கிடையில், 'போலீஸ் அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்வது அரசைப் பொறுத்தது' என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹைகோர்ட்டையே அணுகுமாறு உத்தரவிட்டது.
இதுதவிர இந்த மோதல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. வழக்கறிஞர் சங்கங்களும் தனியாக வழக்கு தொடர்ந்தன. தமிழக அரசு நியமித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் விசாரணை நடத்தியது. அதில் வக்கீல்களை பெருமளவில் சாடி கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த விசாரணை கமிஷனின் இடைக்கால அறிக்கையை வக்கீல்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரிக்க, நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதியை ஆகியோரை தலைமை நீதிபதி கோகலே நியமித்தார். இந்த வழக்கில் 20 நாட்களாக விசாரணை நடந்தது.
வக்கீல்கள் தரப்பில் உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன், வக்கீல் ஆர்.வைகை உள்பட பலர் ஆஜராகி வாதாடினார்கள்.
காவல்துறை அதிகாரிகள் தரப்பில் டெல்லி வக்கீல் ராஜீவ் தவான், தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனும் ஆஜராகி வாதாடினார்கள்.
வக்கீல் ராஜீவ் தவான் வாதாடுகையில், போலீசார் வன்முறையில் ஈடுபடுமாறு எந்த அதிகாரியும் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று வாதாடினார். போலீஸ் அதிகாரிகள் குற்றம்புரியும் உள்நோக்கத்துடன் செயல்படவில்லை என்றும், இதற்காக எந்த சதித் திட்டமும் தீட்டவில்லை என்றும் வற்புறுத்தி வாதாடினார்.
இரு தரப்பிலும் எடுக்கப்பட்ட வீடியோ படங்கள் நீதிபதிகள் முன்பு காண்பிக்கப்பட்டன. விசாரணை முடிவடைந்ததால் வழக்கின் தீர்ப்பை கடந்த 7ம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இந்த வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், முன்னாள் கமிஷனரும் தற்போதைய சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியுமான ராதாகிருஷ்ணன் , முன்னாள் கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன், மற்றும் போலீஸ் அதிகாரிகள் பிரேமானந்தன், ராமசுப்பிரமணியன் ஆகிய 4 பேர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் அந்நாளில் நடந்த சம்பவங்களுக்கு இவர்களே பொறுப்பு என்றும், ஹைகோட்டில் நடந்த சம்பவம் நீதித்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், போலீஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட கிரிமினல் வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகளை தொடரலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.













Click it and Unblock the Notifications