சோமாலியா கடற்கொள்ளையர் பிடியில் மேலும் ஒரு தமிழர்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சேர்ந்தமரம் அருகே உள்ளது வேலப்பநாரூர். இந்த ஊரை சேர்ந்தவர் சேர்மன். இவரது மகன் மாணிக்கம்.
கடந்த ஓராண்டாக மும்பையை சேர்ந்த ஒரு கப்பல் நிறுவனத்தில் மரைன் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் பணி புரிந்த கப்பல் எம்வி காலித் கடந்த 22ம் தேதி காலை சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்டது. இதுகுறி்த்து மும்பையில் உள்ள கப்பல் நிறுவனம் மாணி்கத்தின் பெற்றோர்களுக்கு 23ம் தேதி தகவல் தெரிவித்தது.
கடற்கொள்ளையர்களால் மகன் கடத்தப்பட்டது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் என்ன செய்வது என தெரியாமல் கதறினர். இந்நிலையில் நேற்று கலெக்டர் ஜெயராமனை அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரிகள் ஆகியோர் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது,
மாணிக்கம் பணியாற்றி வந்த கப்பலை கடந்த 22ம் தேதி சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்று விட்டனர். இதுகுறி்த்து சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் மூலம் தெரிந்து கொண்டோம்.
எனவே மத்திய அரசிடம் பேசி மகனை மீட்டு தரவும், அவனது உயிருக்கும், உடைமைக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
உடனை சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய கலெக்டர் ஜெயராமன், தமிழக அரசு மூலம், மத்திய அரசிடம் தகவல் தெரிவித்து மீட்பு பணிகள் தூரிதப்படுத்தப்படும். மாணிக்கத்தை பத்திரமாக மீட்டு தர அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்கான முழு ஓத்துழைப்பையும் மாவட்ட நிர்வாகம் அளிக்கும் என்றார்.
ஏற்கனவே இரு தமிழர்கள் சோமாலிய கடற் கொள்ளையர்கள் பிடியில் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் நெல்லை என்ஜீனியரும் சிக்கியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.