மத்திய தகவல் ஆணைய தலைவர் ஆவாரா கிரண்பேடி?
டேராடூன்: மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியை நியமிக்க வேண்டுமென யோகா குரு ராம்தேவ் மற்றும் சமூக போராளி அன்னா ஹசாரே ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஊழல் தடுப்பு முயற்சிகளுக்கு பெரிதும் உதவக்கூடிய தகவல் ஆணையத்தின் தலைமை பதவிக்கு துடிப்பும், நேர்மையும் கொண்ட அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், நேர்மையானவர் என பெயரெடுத்தவருமான கிரண் பேடியை இப்பதவியில் அமர்த்த வேண்டும் என நடிகர் அமிர் கான் உள்ளிட்ட பிரபலங்கள், அமைப்புகள் ஏற்கனவே பிரதமரிடம் கோரியுள்ளனர்.
கிரிமினல்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிரான போராட்டத்திலேயே தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டுள்ள கிரண்பேடி தான் தகவல் ஆணைய தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என மகசேசே விருது பெற்ற அரவிந்த் கேஜ்ரிவால், சந்தீப் பாண்டே ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தகவல் ஆணையத்தின் அடுத்த தலைவராக கிரண்பேடியை நியமிக்கவில்லையெனில், அதற்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்தியாக வேண்டும் என்று யோகி ராம்தேவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
மத்திய தகவல் ஆணையத்தின் தலைவராக இருந்த வஜாஹத் ஹபிபுல்லா, கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.