பிரதமரின் பாதுகாப்பு கெடுபிடியால் நோயாளி சாவு
டெல்லி: தனது பாதுகாப்புப் படையினரால் ஏற்பட்ட கெடுபிடி காரணமாக ஒரு நோயாளிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் போய் அவர் உயிரிழந்தது பெரும் வருத்தம் அளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
சண்டிகரைச் சேர்ந்த சுமித் பிரகாஷ் வர்மா என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம், பிஜிமர் எனப்படும் சண்டிகர் முது நிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுக் கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் வந்திருந்தார். இதையடுத்து பிரதமரின் பாதுகாப்புப் படையினர் ஏற்படுத்திய கெடுபிடியால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வர்மாவைக் கொண்டு செல்ல முடியவில்லை.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆம்புலன்ஸை விடாமல் தடுத்து வைத்திருந்தனர் பாதுகாப்புப் படையினர். இதனால் பரிதாபமாக உயிரிழந்தார் வர்மா.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனது கணவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால் அவர் பிழைத்திருப்பார் என்று வர்மாவின் மனைவி கண்ணீர் விட்டுக் கதறி அழுதிருந்தார்.
இந்த நிலையில், நடந்ததை அறிந்த பிரதமர் மன்மோகன் சிங் இதுகுறித்து வர்மாவின் மனைவிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், வர்மாவின் மறைவால் தான் பெரும் வேதனை அடைந்திருப்பதாகவும், பாதுகாப்பு கெடுபிடியால் இந்த துயரம் நிகழ்ந்திருப்பதாக அறிந்து தனிப்பட்ட முறையில் வருத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் பிரதமர்.












Click it and Unblock the Notifications