உணவு பொருள்களுக்கான பணவீக்கம் 13%
அக்டோபர் 17-ம் தேதியுடன் முடிந்த வாரத்துக்கான பணவீக்கம் 1.51 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால் நாட்டின் உண்மையான விலை நிலையை விளக்கும் வகையில் உணவுப் பொருட்களின் ஆண்டு மொத்த விலை உயர்வுக் குறியீட்டெண் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது மத்திய அரசு முதல்முறையாக.
அதன்படி உணவுப் பொருட்களின் மொத்த விலைக் குறியீட்டெண் மட்டும் 13 சதவிகிதம் வரை உயர்வு கண்டுள்ளது. குறிப்பாக வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கின் விலையில் மிக மோசமான உயர்வு ஏற்பட்டுள்ளது கடந்த சில வாரங்களில்.
வெங்காயத்தின் விலை 50 சதவிகிதமும், பருப்பு வகைகளின் விலையில் 23.45 சதவிகிதமும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் மட்டும் 13 சதவிகிதம் என இம்முறை தனியாகக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது மத்திய அரசு.
உணவுப் பொருள்கள் தவிர பிற பொருள்களின் விலையிலும் 8 சதவிகிதம் வரையிலான உயர்வு ஏற்பட்டுள்ளது.
அரிசி 12 சதவிகிதமும், பால் பொருள்கள் 10 சதவிகிதமும் விலை உயர்வு கண்டுள்ளன.
எரிபொருள்களின் விலையில் மட்டுமே 6 சதவிகித வீழ்ச்சி காணப்படுகிறது.