ராகிங்கில் ஈடுபட்ட 28 உ.பி. மாணவர்கள் அதிரடி டிஸ்மிஸ்
வாரணாசி: உ.பி. மாநிலம் வாரணாசியில், கடந்த செப்டம்பர் மாதம் ஜூனியர் மாணவர்களிடம் ராகிங் செய்தும், கல்லூரி விடுதியை சூறையாடியும் அக்கிரமம் செய்த 28 சீனியர் மாணவர்கள் கல்லூரியை விட்டு அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரியில் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி, ராகிங் செய்ததை கல்லூரி முதல்வரிடம் சொல்லியதற்காக முதலாமாண்டு படித்த மாணவர்களை, சீனியர் மாணவர்கள் மூர்க்கமாக தாக்கினர். மேலும் கல்லூரி விடுதியையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
இதையடுத்து 28 மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. கல்லூரியின் ராகிங் ஒழிப்பு கமிட்டி இதுகுறித்து விசாரணை நடத்தியது.
இந்த கமிட்டியின் முடிவுப்படி தற்போது 28 மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். நவம்பர் 15ம் தேதிக்குள் தங்களது டிசிக்களை அவர்கள் வாங்கிக் கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
28 பேரில் 2 பேர் (ஜங் பகதூர் சிங், பையூஷ் சிங்) நிரந்தரமாக கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். 13 பேர் 2 கல்வி ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளனர். மற்ற 13 பேரும் ஒரு செமஸ்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
--