நெல்லையில் வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்
நெல்லை: தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல்லையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதியிலும், ரோடுகளிலும் தண்ணீர் தேங்கியிருப்பதால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.
பல இடங்களில் சுகாதாரம் சீர்கேடு அடைந்து காணப்படுகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. வைரஸ் காய்ச்சலுக்கு மாவட்டம் முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். பாளை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 80 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் சிறுவர்கள்.
தொடர்ந்து பலர் சிகிச்சைக்காக வந்த வண்ணம் இருப்பதால் பாளை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளது. நெல்லையில் தொடர்ந்து மழை பெய்வதால் சுகாதார பணிகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
மேலும் அம்பை, சிங்கை, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமானோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.