ஆஸி. கப்பலில் இருந்த 22 இலங்கைத் தமிழர்கள் வெளியேறினர்
சிட்னி: இந்தோனேசியாவின் பிரன்டன் தீவில், கடந்த 25 நாட்களாக கப்பலில் தவித்துக் கொண்டிருக்கும் 78 இலங்கைத் தமிழர்களுக்கும் அரசியல் புகலிடம் வழங்க கொள்கை அளவில் ஆஸ்திரேலிய அரசு சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் இருந்து 22 தமிழர்கள் வெளியே வந்துள்ளனர்.
78 தமிழர்களும் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றபோது ஆஸ்திரேலியப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு ஓசியானிக் வைகிங் என்ற கப்பல் மூலம் இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு கடந்த 25 நாட்களாக அவர்கள் கப்பலை விட்டு இறங்காமல் போராடி வருகின்றனர்.
இவர்கள் ஆஸ்திரேலியாவின் பொறுப்பு என்று இந்தோனேசியா கூறி வருகிறது. இதனால் ஆஸ்திரேலிய அரசு பெரும் தர்மசங்கடத்துக்குள்ளானது.
இந்த நிலையில், இந்தத் தமிழர்களை ஆஸ்திரேலியா உடனடியாக தனது பொறுப்பில் எடுக்க வேண்டும் என அங்குள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கோரி வந்தன. மேலும் மேற்கு ஆஸ்திரேலிய முதல்வரும், மனிதாபிமானமே இல்லாமல் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
இப்படி உள்நாட்டிலேயே அழுத்தங்கள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து தனது பிடிவாதப் போக்கை மாற்றிக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, 78 தமிழர்களுக்கும் அரசியல் புகலிடம் வழங்குவது குறித்து கொள்கை அளவில் சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
அரசியல் புகலிடம் பெறுவதற்குத் தகுதியானவர்கள் 12 வாரங்களுக்குள் அந்த தகுதியைப் பெற்று குடியேற்றம் செய்யப்படுவார்கள் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.
முன்னதாக டெல்லி வந்துள்ள கெவின் ரூட் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் புகலிடம் கோருவோருக்கு ஐ.நா. அகதிகளுக்கான ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின்படியான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றார்.
மேலும், 78 தமிழர்களுக்கும் இந்த வார தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அதிகாரிகளிடமிருந்து எழுத்துப்பூர்வமான உத்தரவாதமும் இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ளதாம்.
அதில், அகதிகளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர்கள் 4 முதல் 6 வாரங்களுக்குள் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுவர். மற்றவர்கள் 12 வாரங்களில் குடியமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் முடிவு மற்றும் தமிழர்கள் கப்பலிலிருந்து இறங்கி வர சம்மதம் தெரிவித்திருப்பது ஆகியவை மகிழ்ச்சி அளி்பதாக இந்தோனேசிய வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் முதல் கட்டமாக தற்போது 22 தமிழர்கள் கப்பலை விட்டு வெளியேறியுள்ளனர்.
22 பேரும் ஒரு படகு மூலம் குடியேற்றப் பிரிவு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து இந்தோனேசிய குடியேற்றப் பிரிவு அதிகாரி அரிபின் கூறுகையில், மாலை 3.15 (இந்தோனேசிய நேரம்) மணியளவில் 22 இலங்கைத் தமிழர்கள் (அனைவரும் ஆண்கள்) ஓசியானிக் வைகிங் கப்பலை விட்டு வெளியேறினர். அவர்கள் முதியாரி படகு மூலம் தான்சுங் பினாங்கில் உள்ள குடியேற்றப் பிரிவு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றார்.
இதன் மூலம் கடந்த 25 நாட்களாக நிலவி வந்த பெரும் இழுபறி முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளது.