பணம் தர மாட்டோம் என எழுதித் தந்தால் இடைத் தேர்தலில் போட்டி-ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

Ramdoss
சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அனைத்துக் கட்சியினரும் கையெழுத்திடும் ஒரு ஒப்பந்தத்தை முதல்வர் கருணாநிதி ஏற்படுத்தினால்தான் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி ஆகிய தொகுதிகளின் இடைத் தேர்தலில் பாமக போட்டியிடும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

சட்டமன்ற இடைத் தேர்தல் தொடர்பாக முதல்வர் கருணாநிதி அனைத்து கட்சிகளையும் அழைத்துப் பேச வேண்டும். வாக்காளர்களுக்கு யாரும் பணம் கொடுக்க மாட்டோம் என்று சர்வ கட்சிகளும் முடிவெடுத்து, அதற்கான ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி, அதில் அனைத்துக் கட்சிகளையும் முதல்வர் கையெழுத்திடச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் முதல்வர் கருணாநிதிக்கு பாமக ஆளுயர மாலை அணிவித்து பாராட்டுவதுடன், இந்த முடிவை செயல்படுத்தினால் இடைத் தேர்தலில் பாமக நிச்சயமாக போட்டியிடும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கே விருப்பமில்லை. அதனால்தான் இது தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண சர்வ கட்சித் தலைவர்களையோ, நிபுணர்களையோ தேர்தல் ஆணையம் கலந்தாலோசிக்கவில்லை (புகாரை தேர்தல் ஆணையம் நிரூபிக்கச் சொல்லி கூப்பிட்டும் இவர் போகவில்லை என்பது நினைவுகூறத்தக்கது)

குறைந்தபட்சம் வாக்காளர்கள் தாங்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலாவது மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை மாற்றியமைக்க வேண்டும்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு உதவுவதற்காக முதல்வர் ரூ.100 கோடி நிதியை அறிவித்துள்ளார். நான் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள், காப்பீட்டுத் திட்டம் அவற்றை செயல்படுத்த வேண்டும்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக ஏழை உழவர்களின் நிலங்கள் பெரிய தொழிலதிபர்களிடம் தாரை வார்க்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலங்களை கையகப்படுத்தி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவு முறைகேடுகள் நடப்பதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சமூக ஆர்வலரு மான அருணா ராய் தலைமையிலான குழு குறிப்பிட்டுள்ளது.

ஒரு சென்ட் விளை நிலத்தை கூட சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்த மாட்டோம் என்று முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார். ஆனால் தற்போது விளை நிலங்கள்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்படுகின்றன.

நில உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பத்திரப் பதிவுகள் நடக்கும் அராஜகங்களும் அரங்கேறுகின்றன. இது போன்ற தவறுகளுக்கு தமிழக அரசின் நில கொள்கைதான் காரணம்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களின் மூலம் தமிழ்நாட்டில் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நீதிபதி தினகரன் திருத்தணி பகுதியில் 200 ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருப்பதாக மாவட்ட கலெக்டரே அறிக்கை அளித்துள்ளார். இதன் பிறகும் இந்த விஷயத்தில் விசாரணை அவசியமா?.

அவருக்கு பதிலாக அவரது இடத்தில் தகுதி வாய்ந்த ஒரு தலித் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும். நீதிபதிகளை விசாரிப்பதற்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். அந்த சட்டத்தை தாமதமின்றி கொண்டு வர வேண்டும்.

பூரண மதுவிலக்குதான் பாமகவின் கொள்கை. ஆயினும் அந்த நிலை அமல்படுத்தப்படும் வரை டாஸ்மாக் ஊழியர்களுக்கு 6 மணி நேர வேலை, வார விடுமுறை, 75 சதவீதம் போனஸ், விழாக் காலங்களில் இரண்டு நாட்கள் விடுமுறை ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+