பஸ் மீது கல்வீச்சு தாக்குதல்-டிரைவர் பலி
கொடைரோடு: மதுரை அருகே அரசு பஸ் மீது ஒரு கும்பல் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதில் டிரைவர் பலியானார்.
மதுரையில் இருந்து ஓசூரை நோக்கி நேற்று இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
8.45 மணியளவில் மதுரை அருகே பாண்டியராஜபுரம்- பள்ளப்பட்டி 4 வழிச்சாலையில் பஸ் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பஸ்ஸை வழி மறித்து சரமாரியாக கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பியது.
இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து டிரைவர் யுவராஜுக்கும் (39) மண்டை உடைந்தது. அதிக அளவி்ல் ரத்தம் வெளியேறியதில் டிரைவர் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை பயணிகள் இன்னொரு வாகத்தி்ல் ஏற்றி வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
அதே போல பள்ளப்பட்டி பிரிவு, வாடிப்பட்டி மாதா கோவில் அருகில் 2 அரசு பஸ்கள் மீது மர்ம கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதிலும் பஸ்களின் கண்ணாடிகள் முழுவதும் சேதமடைந்தன.
இந்த சம்பவங்களால் அப் பகுதியி்ல் பதற்றம் உருவாகியுளளது. இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, டி.ஐ.ஜி. ரத்தீப் மித்தல் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல் போலீசார் இந்த நெடுஞ்சாலையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் தனியரசு சென்ற கார் மீது மர்ம கும்பல் கல்வீசி தாக்கியது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் பல பஸ்கள் உடைக்கப்பட்டன. பழனியில் ஒரு பஸ் எரிக்கப்பட்டது. இந் நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
பலியான அரசு பஸ்சின் டிரைவர் தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியைச் சேர்ந்தவர் ஆவார்.