உலகளவில் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இந்தியாவில் அதிகம் - ஐ.நா
வளரும் நாடுகளில் மட்டும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 200 மில்லியன் பேர் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருவிலிருக்கும் நிலை மற்றும் குழந்தைப் பருவத்தில் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காததே இதற்கு அடிப்படை காரணம் என்றும் ஐ.நா.வின் குழந்தைகள் நிதியம் வெளியிட்டுள்ள (யுனிசெப்) அறிக்கை கூறுகிறது.
யுனிசெப் நிறுவனம், 'குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் தாய்ப்பால் ஊட்டச்சத்து' என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் குழந்தைகளின் நிலவரம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது:
ஐந்து வயதுக்குட்பட்ட எடை மற்றும் வளர்ச்சி குறைந்த குழந்தைகள் இந்தியாவில் அதிகளவு உள்ளன. இந்தியாவில் ஆண்டுக்கு 7.4 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் போதே எடை குறைவாக பிறக்கின்றன.
உலகம் முழுவதும் வளர்ச்சி குறைபாட்டால் இறப்பை சந்திக்கக் கூடிய அபாய நிலையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது.
காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் இறந்துபோன குழந்தைகளில் 3ல்1 பங்குக்கும் மேற்பட்டவை, நல்ல ஊட்டச்சத்து இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கக் கூடியவை.
குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு தொடர்பான பிரச்னையில் போதிய கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், வருங்காலத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பிரச்னை விபரீதமாகி விடும் என்றும் ஐ.நா அறிக்கை எச்சரிக்கிறது.