நம்பிக்கை இல்லா தீர்மானம்-திமுகவுக்கு ஈவிகேஎஸ் எச்சரிக்கை
சென்னை: ஈரோடு மாவட்டம் பள்ளிக்கரணை பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மற்ற பகுதிகளுக்கும் தொடருமேயானால், சென்னை கோட்டைக்கும் அது கொண்டு வரப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரித்துள்ளார்.
நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. அதில் பேசிய இளங்கோவன்,
காங்கிரஸ், திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சென்று வந்ததன் மூலம், முள்வேலி முகாம்களில் இருந்த 3 லட்சம் பேர்களில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை முகாம்கள் சூப்பர்!...
அங்குள்ள முகாம்கள், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களைவிட அனைத்து வசதிகளுடன் சிறப்பாக உள்ளன. இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட இந்திய அரசின் முயற்சிகளினால்தான், இவை அனைத்தும் நடந்துள்ளன.
தமிழகத்தில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் இங்குள்ள அனைவரின் எண்ணமும். இதை மறைமுகமாகவும், சற்றுத் தயக்கமாகவும் மற்றவர்கள் வெளிப்படுத்தியிருந்தாலும், அனைவரின் லட்சியமும் இதுதான்.
தமிழகத்தில் கூட்டணி பலமாகத்தான் இருக்கிறது. ஆனால், சில சம்பவங்கள் நடைபெறுகிறபோது, அதை எடுத்துக்காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பள்ளிக்கரணை பஞ்சாயத்தில் தலைவராக இருந்த காங்கிரஸ்காரர் மீது, திமுகவினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அவரை தோற்கடித்துவிட்டனர். இது காங்கிரஸ் தரப்பினரிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலை நாளைக்கு ஈரோடு மாவட்டத்துக்கோ அல்லது கோவைக்கோ தொடருமேயானால், சென்னை கோட்டைக்கும் வந்துவிடும் (திமுக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் என்கிறார்) என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது ஒருவழிப் பாதையல்ல.
இவையெல்லாம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலும், காங்கிரஸினுடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இதைக் கூறுகிறோம். எனவே இதுபோன்ற சிறு விஷயங்களில் முதல்வர் தலையிட்டு, காங்கிரஸ்காரர்களுடைய தன்மானத்தை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம்.
மாவட்டங்களில் இருந்து வரும் சில செய்திகள் சென்னை நகரத்துக்கோ, முதல்வரின் காதுகளுக்கோ எட்டுவதில்லை என்ற எண்ணத்தைதான் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications