ஒரே நாளில் சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்த தங்கம்
சென்னை: இதயம் பலவீனமாக உள்ளவர்கள் இன்றைக்கு கட்டாயம் தவிர்க்க வேண்டிய செய்திகளில் ஒன்றாகி விட்டது தங்கத்தின் ஜெட் வேக விலை உயர்வு பற்றிய செய்தி.
தொடர்ந்து விலை உயர்ந்து வரும் தங்கம் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சவரனுக்கு ரூ.312 வரை உயர்ந்து நடுத்தர மக்களை விழி பிதுங்க வைத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் 12 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. ஆனாலும் இந்தியர்களின் நகை மோகம் குறைந்தபாடில்லை. நகைக்க கடைகளில் கூட்டம் குவிந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1558 ஆக இருந்தது. ஒரு பவுன் ரூ.12,464க்கு விற்கப்பட்டது. இன்று (திங்கள்) தங்கம் விலை ரூ.312 அதிகரித்தது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.1,597 ஆக இருந்தது. நேற்று முன்தினம் இருந்ததை விட ஒரு கிராமுக்கு 39 ரூபாய் அதிகரித்து விட்டது.
இதனால் ஆபரணத் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.12,776 ஆக விற்பனை செய்யப்பட்டது. இன்னும் 4 மாதங்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.16 ஆயிரத்தை எட்ட வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
பல நகைக் கடைக்காரர்களுக்கு இந்த விலையேற்றம் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. காரணம் இவர்கள் எப்போதோ வாங்கிய தங்கம் / வெள்ளி நகைகள் இந்த கடுமையான விலையேற்றம் காரணமாக 40 சதவிகிதத்துக்கும் அதிகமான லாபத்துடன் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications