அதிமுகவில் சூடுபிடிக்கும் உள்கட்சி தேர்தல்
நெல்லை: நெல்லையில் அதிமுகஉள்கட்சி தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. மாவட்ட, பகுதி செயலாளர்கள் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவுவதால் கட்சியினர் மத்தியில் தேர்தல் ஜுரம் தொற்றிக் கொண்டுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி தேர்தல் கடந்த 2003ம் ஆண்டில் நடந்தது. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக கடந்த ஆண்டு உட்கட்சி தேர்தல் நடக்கவில்லை.
வட்டம், பகுதி, கிளை, மாவட்டம், ஒன்றியம் என பல்வேறு பிரிவுகளாக நடைபெறும் இத்தேர்தல்களில் நிர்வாக பதவிகளை கைப்பற்ற அதிமுகவினர் கட்சிக்குள்ளாக காய் நகர்த்த தொடங்கிவிட்டனர். இதனால் பல இடங்களில் போட்டி உறுதியாகிவிட்டது.
நெல்லை மாநகரில் வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை வட்ட பொறுப்பாளர்கள் தேர்வும், டிசம்பர் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை பகுதி பொறுப்பாளர்களுக்கான தேர்வும் நடக்கிறது. டிசம்பர் 11ம் தேதிக்குள் மாவட்ட செயலாளர் தேர்தலும் முடிந்து விடும்.
நெல்லை மாவட்டத்துக்கு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் கருப்பசாமி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். நெல்லை புறநகர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் செந்தூர் பாண்டியனை எதிர்த்து முருகையா பாண்டியன், அண்ணாமலை ஆகியோர் களம் இறங்கலாம் என தெரிகிறது.
மாநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில் தற்போது பொறுப்பில் இருக்கும் பாப்புலர் முத்தையாவை எதிர்த்து கல்லூர் வேலாயுதம், சுதா பரமசிவன் ஆகியோர் களம் இறங்க உள்ளனர். நெல்லை மாநகர் மாவட்டத்தோடு சமீபத்தில் மானூர் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளை இணைத்து தலைமை உத்தரவிட்டது.
இதனால் பதவி இல்லாமல் இருக்கும் கல்லூர் வேலாயுதம் இம்முறை மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட தயாராகி வருகிறார். ஏற்கனவே மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த சுதா பரமசிவமும் மீண்டும் அப்பதவிகை கைப்பற்ற களம் இறங்க உள்ளார். பகுதி செயலாளர் பதவிக்கு புதியவர்கள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் நிர்வாகிகள் மீது விசாரணை:
இந் நிலையில் கரூரில் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கோஷ்டி மோதல் யுத்தம் நடத்தி வருவதாக வந்த புகாரை அடுத்து திருச்சி மண்டல பொறுப்பாளர் கலியபெருமாள் கரூருக்கு விசிட் திடீர் விசிட் மேற்கொண்டார்.
கரூரில் மாவட்ட அதிமுகவில் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர் சின்னசாமி ஒரு அணியாகவும் , கரூர் எம்பி தம்பித்துரை ஒரு அணியாகவும் செயல்படுவதாக போயஸ் கார்டனுக்கு புகார்கள் பேக்ஸ் மூலம் பறந்து சென்றுள்ளது.
இனால் கரூர் மாவட்ட நிர்வாகிகல் கூட்டத்தை நடத்த திட்டமிட்ட திருச்சி மண்டல பொறுப்பாளர் கலியபெருமாள் கடந்த ஒரு ஒரு சில தினங்களுக்கு முன்பு ரகசிய விசிட் அடித்து கூட்டம் போட்டார்.
கூட்டத்தில் , கரூர் மாவட்டத்தில் கோஷ்டி பூசல் உச்சத்தில் உள்ளது. வரும் காலத்தில் யார் மீதும் புகார் வராத வண்ணம் செயல்பட வேண்டும். மேலும் முறையாக செயல்படுவர்களுக்கு பதவிகள் தேடி வரும் என்று திருச்சி மண்டல பொறுப்பாளர் கலியபெருமாள் கூறியுள்ளார்.
மேலும் , சிலர் மீது விசாரணை நடத்தி விட்டு சென்றுள்ளதாக அதிமுக தரப்பில் கூறப்படுகின்றது. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பதவி மாற்றப்படும் என்று பரவலான கருத்து உள்ளது.












Click it and Unblock the Notifications