குண்டு மிரட்டல்-குமரி நபரை பிடிக்க மும்பை போலீஸ் வருகை
மும்பை: மும்பையில் உள்ள பல்வேறு இடங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதம் கன்னியாகுமரியிலிருந்து அனுப்பப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மும்பை போலீஸார் கன்னியாகுமரி விரைகின்றனர்.
மும்பையில் உள்ள சர்ச்கேட் ரெயில் நிலைய மேலாளருக்கு மர்ம கடிதம் ஒன்று வந்தது. இந்தியில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதம் கன்னியாகுமரியில் இருந்து தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகை, முதல்வர் வீடு, சட்டசபை கட்டிடம், நரிமன் பாயிண்ட், ஜூகு கடற்கரை, ரிசர்வ் வங்கி கட்டிடம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாதர் ரயில் நிலையம், தாஜ் ஓட்டல், ஒபராய் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் நவ 14-ந்தேதி அல்லது 28-ந்தேதி குண்டுகள் வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மேற்கண்ட இடங்கள் மட்டுமின்றி மும்பையின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலமடங்க அதிகரிக்கப்பட்டது.
மேலும், கடிதத்தின் நகலை பேக்ஸ் மூலம் தமிழக போலீசாருக்கு அனுப்பி விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
மேலும், விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீசார் விரைவில் தமிழகம் வர உள்ளனர். அப்போது கன்னியாகுமரிக்கு சென்று மிரட்டல் தபால் அனுப்பப்பட்ட தபால் நிலையத்தில் விசாரணை நடத்த உள்ளனர்.
கன்னியாகுமரி போலீசாரும் இது தொடர்பான விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கன்னியாகமரியை சேர்ந்த நபர்தான் இதை அனுப்பியிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் கடிதம் இந்தியில் இருப்பதால் குமரிக்கு வந்து வட மாநிலத்தைச் சேர்ந்த யாரேனும் அனுப்பியிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications