ரூ. 20 கோடி போதை பொருளுடன் பனியன் நிறுவன ஊழியர் கைது
திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த பனியன் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ. 20 கோடி மதிப்புள்ள எபிட்டரின் என்ற போதை மருந்து சிக்கியுள்ளது.
திருப்பூர், அவினாசி ரோட்டில் பனியன் கம்பெனி நடத்தி வருபவர் துரைசாமி. இவரது மகன் ரமேஷ் குமார்(30). இவர், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நேற்று முன்தினம் கொச்சியில் சிக்கினார்.
அவரது தகவலின் பேரில், கோவை மத்திய சுங்க இலாகா வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அருணாசலம், சண்முகராஜன் உள்ளிட்டோர், திருப்பூர் பனியன் நிறுவனத்தில், மேற்பார்வையாளராக வேலை செய்யும், வாலிபாளையத்தில் வசித்து வந்த செல்வக்குமார் (19) வீட்டில் சோதனை நடத்தினர்.
அங்கு, 96.673 கிலோ எபிட்டரின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.
செல்வக்குமார் காரைக்குடி அருகே உள்ள சிவந்தங்குடியை சேர்ந்த குமரப்பனின் மகன். திருப்பூர் வாலிபாளையத்தில் சித்தப்பா வீட்டில் வசித்து வந்தார். பனியன் நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை செய்துவருகிறார்.
கைது செய்யப்பட்ட அவரை, சுங்க இலாகா அதிகாரிகள், விசாரணைக்கு பின், திருப்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 2ல் நேற்று ஆஜர்படுத்தினர். செல்வக்குமாரை, டிசம்பர், 8ம் தேதி வரை கோர்ட் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் மலர்மன்னன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, அவர் ரிமாண்ட் செய்யப்பட்டார்.
எபிட்டரின், மருந்து தயாரிப்பு போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. அவற்றை உரிமம் இல்லாமல் வைத்திருப்பது, விற்பது சட்டப்படி குற்றம். 1985ம் ஆண்டு போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தற்போது செல்வக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 20 கோடியாகும்.