பெரிய மிருகங்கள் பலி கூடாது-ராம.கோபாலன்
சென்னை: பொது இடங்களிலோ, வீடுகளிலோ பெரிய மிருகங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தவ்ஹீத் ஜமாத் முதலானவை பக்ரீத்தை முன்னிட்டு மாடு, ஒட்டகம் போன்றவற்றை வெட்ட ஆங்காங்கே விளம்பரங்கள் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
பசுவை, மாடுகளைப் பலியிடுவது இந்துக்களுக்கு விரோதமானதும், இயற்கை விவசாயத்தை சீரழித்து நாட்டுக்கு கேடு விளைவிக்கும் சதிச் செயல். இதை இயற்கை ஆர்வலர்கள் தேச பக்தர்கள் கண்டிக்க, தடுக்க முன் வரவேண்டும்.
பொது இடங்களிலோ, வீடுகளிலோ பெரிய மிருகங்களை வெட்டுவதைத் தடுப்பதற்கு போலீஸ் துறையின் சட்டமே போதுமானது. இதனை சட்டத்தின் துணை கொண்டு தடுத்திட போலீஸ் துறை மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட் கருத்தின் அடிப்படையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் ஐகோர்ட்டுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, இதனை போலீஸ் துறை தடுக்க மறுத்தாலோ, மெத்தனமாக செயல்பட்டாலோ, சட்டவிரோத செயலை தடுக்க தவறிய செயலுக்காக அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் செல்ல நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.
பத்திரிகையாளர்களும், பிராணி வதைத் தடுப்பு குழுக்களும், இயக்கங்களும் கண்காணித்து போலீஸ் துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். போலீஸ் துறை மெத்தனப் போக்காக செயல்படுமானால் இக்கொடுஞ்செயலை எதிர்த்து மக்கள் போராடவும் தயங்க மாட்டார்கள் என்று இந்து முன்னணி எச்சரிக்கிறது என்று கூறியுள்ளார்.