ஓவர் லோடு பள்ளி வேன்-பஸ்களுக்கு அபராதம்
சென்னை: அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்துகள், வேன்களை நிறுத்தி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இப்படி ஏற்றிச் சென்ற 28 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி வேன், பஸ், ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்வதாக போக்குவரத்து துறை இணை ஆணையர் பிராங்க் ஸ்டீபன் லூயிசுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.ஸ்ரீதர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சம்பத் குமார், சரவணன், ராஜசேகர், வீரபாண்டியன் ஆகியோர் கிழக்கு தாம்பரம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, பள்ளி மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றி வந்த வேன், கார், பஸ் மற்றும் ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் பெர்மிட் இல்லாத 6 மாருதி கார், அதிக மாணவர்களை ஏற்றிய 4 ஆட்டோ, முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பு வசதிகள் இல்லாத 12 வாகனங்கள் உட்பட 28 வாகனங்களுக்கு ரூ.22,500 அபராதம் விதிக்கப்பட்டது.
சேலையூர் அருகே ஒரு பள்ளி பஸ்சை சோதனையிட்ட போது, அதில் 102 மாணவர்கள் இருந்தனர். ஒரே சீட்டில் 5 மாணவர்களும், ஏராளமானோர் நின்றபடியும் பயணம் செய்தனர்.
இதுபோன்று அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பக் கூடாது. இதுபற்றி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதேபோல பெரும்பாலான பள்ளி வேன்கள், பஸ்கள் அதி வேகமாக செல்வது சென்னை நகரில் சர்வ சாதாரணமாக பார்க்கக் கூடியதாக உள்ளது. இவற்றையம் கட்டுப்படுத்தி கடும் நடவடிக்கை எடுத்தால் நலமாக இருக்கும் என மக்கள் விரும்புகிறார்கள்.
படு வேகமாக போகும் வாகனங்களாக ஆட்டோக்கள்தான் முன்பு இருந்தன. ஆனால் ஆட்டோக்களை விட மோசமாக பல பள்ளி வேன்களை அதன் டிரைவர்கள் ஓட்டிச் செல்கின்றனர். இந்த வேன்கள் பெரும்பாலும் தனியார் வாகனங்களாக உள்ளன. இவற்றை சம்பந்தப்பட்ட பள்ளிகள் காண்டிராக்ட் முறையில் அமர்த்தி மாணவர்களை அனுப்பி வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.