லிபரான் கமிஷன் அறிக்கையால் ஜெ.வுக்கும் சிக்கல் தான்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanithi
சென்னை: லிபரான் கமிஷன் அறிக்கையை ஆராயப் புகுந்தால் அம்மையாரும் சிக்கிக்கொள்ள வேண்டும். பாபர் மசூதி இடிப்பின் போது கரசேவையை ஆதரித்தவர் தான் ஜெயலலிதா என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்ததற்காக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பதவி நீக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடித அறிக்கை:

'நினைப்பு தான் பொழப்பைக் கெடுத்ததாம் பேராண்டி' என்று கிராமப்புறத்தில் ஒரு பழமொழி உண்டு. அதைப்போல நம்முடைய எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவுக்கு எப்படியோ பொழுது விடிந்தால் ஒரு அறிக்கை விட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் தலை வெடித்துவிடும்.

தமிழகத்திலே எந்தக் கிராமத்திலாவது ஏதாவது ஒரு சாலையில் சிறிது பாதிப்பு என்றால் போதும், உடனே அங்கே ஒரு ஆர்ப்பாட்டம் என்று அறிக்கை.

அந்த வகையில், தற்போது தமிழகத்தை விட்டுவிட்டு, அடுத்த பிரதமர் என்று நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தான் கண்ட கனவின் காரணமாக நாடாளுமன்றத்திலே நடைபெறும் லிபரான் கமிஷன்அறிக்கை கசிவு பற்றி அறிக்கை விடுத்துள்ளார்.

எந்த அறிக்கை எழுதினாலும், கடைசியில் அதை முடிக்கும்போது, எனவே மந்திரி பதவியில் இருந்து அவர் விலக வேண்டும், இவர் விலக வேண்டும் அல்லது அவரை விலக்க வேண்டும், இவரை விலக்க வேண்டும், ஆட்சியையே கலைக்க வேண்டும் என்றெல்லாம் எழுதி விடுவார்.

தற்போது லிபரான் கமிஷன் அறிக்கை கசிவுக்கு முழுப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியேற வேண்டுமாம், அல்லது வெளியேற்ற வேண்டுமாம்.

பழத்தை உரித்தால் சுளையைத்தான் சாப்பிட வேண்டுமே தவிர, அய்யோ, இந்தச் சுளை எப்படி வந்தது, இந்தத் தோலை உரித்ததால் அல்லவா வந்தது, இதைச் சும்மா விடக் கூடாது என்று புலம்புவதைப் போல உள்ளது.

லிபரான் கமிஷன் அறிக்கையிலே உள்ள செய்திகளை ஆராயப் புகுந்தால் அம்மையாரும் சிக்கிக்கொள்ள வேண்டும். பாபர் மசூதி இடிப்பின் போது கரசேவையை ஆதரித்தவர் அப்போது முதல்வர் பதவியிலே இருந்த ஜெயலலிதா.

1992ம் ஆண்டு டெல்லி ஜான்சி ராணி மைதானத்தில் சுமார் 5 ஆயிரம் சாமியார்கள் கலந்துகொண்ட விசுவ இந்து பரிட்சத்தின் பேரவைக் கூட்டம் நடைபெற்று; அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரச்சினை சம்பந்தமான தீர்மானம் நிறை வேற்றப்பட்டு; அப்போது பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ் பாபர் மசூதியை அகற்றி ராமர் கோயில் கட்டும் முயற்சிக்கு ஆதரவு தராமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி; டிசம்பர் 6-ம் நாள் அதற்கான கரசேவையை தொடங்குவது என்று முடிவெடுத்தார்கள்.

அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, டிசம்பர் 6ம் தேதி கரசேவை நடைபெறுவதற்கு தேவையான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்றும், அயோத்தியில் கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் பேசியது நாளிதழ்களில் வெளிவந்தது.

அப்போது கரசேவையை ஆதரித்து ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்திலேயே பேசியவர் தான் ஜெயலலிதா. அதனால்தான் தற்போது லிபரான் கமிஷன் அறிக்கையில் கசிவு என்றெல்லாம் கூறி அறிக்கை விடுகிறார்.

ஆனால், பாபர் மசூதியின் முழுக் கட்டிடமும் மாலை 5 மணிக்குள் இடித்துத் தள்ளப்பட்டதும், இந்தியா முழுவதும் அதற்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியதால், தான் கரசேவையை ஆதரிக்கவே இல்லை என்று ஜெயலலிதா ஒரு பல்டி அடித்தார். தமிழ் ஈழம் பற்றி அடித்த பல்டி போல. அது வேறு கதை.

அதையெல்லாம் அப்படியே மறந்துவிட்டு அல்லது மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஜெயலலிதா இப்போது மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை வெளியேற்ற வேண்டும் என்கிறார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+