ஹெட்லி, ராணா குறித்த தகவல்களை இந்தியாவிடம் வழங்குகிறது எப்.பி.ஐ

அமெரிக்கா மற்றும் டிரினிடாட் டொபாகோ பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் இந்தியா திரும்பும் வழியில் விமானத்தில் அவருடன் பயணம் செய்த எம்.கே.நாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஹெட்லி, ராணா தொடர்பான வழக்கு குறித்து அதிபர் ஒபாமாவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தபோது ஒபாமா விரிவாக தெரிவித்தார்.
விரைவில் எப்.பி.ஐ. குழு ஒன்றை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாகவும், அந்தக் குழு, அனைத்து தகவல்களையும் இந்தியாவிடம் அளிக்கும் என்றும் ஒபாமா தெரிவித்தார்.
ஹெட்லி, ராணா ஆகியோரின் சதித் திட்டங்கள் குறித்த விரிவான தகவல்கள் நமக்கு அப்போது கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் என்ன தகவலைத் தரப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
பாகிஸ்தானில் பிறந்த தாவூத் கிலானி என்கிற ஹெட்லியும், பாகிஸ்தானில் பிறந்த கனடியரான தஹவூர் ராணாவும், இந்தியா மற்றும் டென்மார்க்கில் தீவிரவாத வேலைகளை நிகழ்த்த லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் இணைந்து செயல்ப்டடதாக கூறி கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து எப்.பி.ஐ. தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு தெரிவிக்கப்படவில்லை. சில தகவல்களை மட்டுமே எப்பிஐ இதுவரை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ராணா, ஹெட்லியை விசாரிக்க அமெரிக்கா சென்ற இந்திய உளவு அதிகாரிகள் அடங்கிய குழுவும், விசாரணை நடத்த அனுமதி கிடைக்காமல் திரும்பி வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications