பெண் எரித்துக் கொலை - மாமியார் கைது - கணவர் சரண்
தென்காசி: இளம்பெண்ணை எரித்து கொலை செய்த மாமியார் கைது செய்யப்பட்டார். கணவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
செங்கோட்டை அருகேயுள்ள லாலாகுடியிருப்பை சேர்ந்தவர் சங்கரலிங்கம்-ரஞ்சிதம் தம்பதியினர். இவர்களது மகள் கனகவல்லி.
இவருக்கும் தென்காசி அருகேயுள்ள புல்லுகாட்டு வலசையை சேர்ந்த சுப்பையா-வேலுமயில் தம்பதியினரின் மகன் ஐயப்பனுக்கும் கடந்த 2008ம் ஆண்டு 20 பவுன் நகை, 15 ஆயிரம் ரொக்கம், சீர்வரிசைகளோடு திருமணம் நடந்தது.
நாட்கள் நகர கனகவல்லிக்கு தினம் தினம் நரக வேதனைகள் அரங்கேற தொடங்கியுள்ளது. குழந்தை இல்லாததால் கொடூரத்தனமாய், கணவனும், மாமியாரும் மாறி, மாறி சித்ரவதை செய்துள்ளனர்.
நேற்று இரவு 7 மணி அளவில் லாலாகுடியிருப்புக்கு கனகவல்லியின் தந்தைக்கு ஒரு போன் வந்தது. அதில் உங்களது மகள் தீக்குளித்து விட்டார் என்று கூறவே, அலறி அடித்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர்.
அங்கு முழுவதும் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக கனகவல்லி தந்தையிடம் அழுதுள்ளார். பின்னர் அவர். தென்காசி போலீசில் கொடுத்த மரண வாக்குமூலத்தில் தனது கணவர் ஐயப்பன் கொடூரமாக தாக்கியதாகவும், அவரது தாயார் வேலுமயில் மண்எண்ணையை தன் மீது ஊற்றி தீ வைத்ததாக அதனை தொடர்ந்து போலீசார் வேலுமயில், ஐயப்பனை பிடிக்க சென்றனர். ஐயப்பன் தப்பி விடவே வேலுமயிலை கைது செய்தனர்.
நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் கனகவல்லி தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இன்று அவரது உறவினர்கள் தென்காசி மாவட்ட மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இந்நிலையில் கணவர் ஐயப்பன் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் சரண் அடைந்தார். கணவர்-மாமியார் சேர்ந்து இளம்பெண்ணை எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.