ராமர் கோயில் கோரி போராட்டம்: இந்து முன்னணியினர் கைது
சென்னை: அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மறியல் செய்ய முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 1992ம் ஆண்டில் இதே நாளில் தான் அயோத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாபர் மசூதியை இடித்து ராமருக்கு கோயில் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இன்று பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். அதன்படி இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபடுவதற்காக இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஏராளமானோர் வந்தனர்.
மறியலில் ஈடுபட முயன்றபோது அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications