திருச்செந்தூரில் திமுக-அதிமுக அடிதடி: வந்தவாசி அதிமுக வேட்பாளர் மீது வழக்கு
திருச்செந்தூர்: இடைத் தேர்தல் நடக்கும் திருச்செந்தூர் தொகுதியில் திமுக, அதிமுகவினர் இடையே பயங்கர மோதல் நடந்தது. இதில் பலருக்கு மண்டை உடைந்தது.
திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட ஆறுமுகநேரி- பேயன்குளம் பகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊர் கூட்டம் போட்டு பிரசாரம் செய்தார்.
அவர் நடத்திய இந்தக் கூட்டத்தி திமுகவை ஆதரித்து ஓட்டுப்போடுவது என்று ஊர் முக்கிய பிரமுகர்கள் முடிவு செய்தனர். இதற்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் திமுக-அதிமுகவினர் இடையே மோதல் மூண்டது. இரு தரப்பினரும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் அடித்துக் கொண்டு உருண்டனர்.
இதில் 4 பேருக்கு மண்டை உடைந்தது. இதையடுத்து தாமோதரன் என்பவர் ஆறுமுகநேரி போலீசில் புகார் தந்தார்.
ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் அதிமுக எம்பிக்கள் இளவரசன், கோவிந்தராஜன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர்.
12ம் தேதி அழகிரி பிரச்சாரம்:
இந் நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து மத்திய அமைச்சர் அழகிரி வரும் 12ம் தேதி உடன்குடியிலும், திருச்செந்தூரிலும் நடக்கும் பிரசார பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.
திமுகவுக்கு சான்றோர் குல நாடார் பேரவை ஆதரவு
இந் நிலையி்ல் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மும்பையில் இருந்து செயல்படும் சான்றோர் குல நாடார் பேரவை ஆதரவு அளித்துள்ளது.
அதன் நிறுவனத் தலைவர் செந்தில் நாடார், செயலாளர் சுரேஷ், நிர்வாகி நாஞ்சில் சிவாஜிராஜன்ஆகியோர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தனர்.
அதிமுக வேட்பாளர் மீது வழக்கு:
இந் நிலையில் வந்தவாசி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனுசாமி மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் நான்கு பேர்தான் அலுவகலத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால் முனுசாமி மனு தாக்கல் செய்யும் போது 16 பேருடன் சென்றார்.
இதையடுத்து விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையம் முனுசாமி மீது வழக்கு தொடர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications