இடைத் தேர்தல்: வாக்குச்சாவடிகளை 'வெப் கேமரா' மூலம் கண்காணிக்க ஏற்பாடு
திருச்செந்தூர்: வாக்குப்பதிவின் போது கள்ளஓட்டு மற்றும் முறைகேடுகளை தடுக்க 2 'வெப் கேமரா'க்களை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொருத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதியில் வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
இடைத்தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பேலட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுப்பதிவு துவங்கிய நேரம், முடிவடைந்த நேரம் பதிவாகாது. ஆனால் தற்போதுள்ள புதிய கன்ட்ரோல் யூனிட்டில், ஓட்டுப்பதிவு துவங்கிய நேரம், ஒவ்வொரு மணி நேரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கை, ஓட்டுப்பதிவு முடிவடைந்த நேரம் ஆகியவை இயந்திரத்திலேயே பதிவாகிவிடும்.
இதன்மூலம் ஓட்டுப்பதிவை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் முடியும். ஒவ்வொரு மணி நேரத்தின் பதிவான ஓட்டு எண்ணிக்கையை அறிந்து கொள்ள எஸ்.எம்.எஸ் கன்ட்ரோல் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடி அலுவலருக்கும், ஒரு சிம்கார்டுடன் மொபைல் போன் வழங்கப்படுகிறது. அதன் மூலம் ஓட்டுப்பதிவு மைய பணியாளர் வருகை, ஓட்டுப்பதிவு துவங்கிய நேரம், ஒவ்வொரு மணி நேரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கை போன்ற தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் உடனுக்குடன் கலெக்டர் அலுவலகம், சென்னை தலைமை தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கம்ப்யூட்டருடன் 'வெப் கேமரா' பொருத்தி, ஓட்டுப்பதிவு துவங்கியது முதல் முடிவடையும் வரை நேரடி பதிவு செய்யப்படும். ஓட்டுப்பதிவு துவங்கும் முன் காலை 7 மணி முதல் 8 மணி வரை வேட்பாளர் களின் ஏஜன்ட்கள் முன், நூறு ஓட்டுப் பதிவு செய்து மாதிரி பதிவு நடத்தப்படும். வேட்பாளர்களின் ஏஜன்ட்கள் திருப்தி உறுதி செய்த பின் பதிவு துவங்கும்.
ஒரு 'வெப்கேமரா' வாக்கு சாவடிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோவில் பதிவு செய்யும். இன்னொரு கேமரா வாக்களிக்க வரும் வாக்காளர்களை போட்டோ எடுக்கும்.
வாக்களிக்க வரும் வாக்காளர் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் 'வெப்கேமரா' எடுக்கும் போட்டோவும், வாக்காளர் பட்டியிலில் இருக்கும் போட்டோவும் கம்யூட்டர் மூலம் ஓப்பிட்டு பார்க்கப்படும்.
திருச்செந்தூர் தொகுதியில் 240 லேப்-டாப் கம்ப்யூட்டர்கள், 'வெப் கேமரா'வுடன் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.