திருப்பூர் ஏற்றுமதி-ரூ.40,000 கோடி இலக்கு நிர்ணயித்த தயாநிதி
திருப்பூர்: 2015ம் ஆண்டில் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜவுளி ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ.40,000 கோடி என்ற இலக்கை அடைய வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.
திருப்பூரி்ல் இளம் ஜவுளி்த் தொழில் அதிபர்களுடன் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆலோசனை நடத்தினார். திருப்பூரில் நடந்த இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு, பல்லடம், கரூர் பகுதிகளில் இருந்து இளம் ஜவுளித் தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.
ஜவுளித் தொழில் பிரச்சனைகள் குறித்தும், ஆயத்த ஆடை ஏற்றுமதி குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் கூட்டத்தில் தயாநிதி மாறன் பேசியதாவது:
திருப்பூரில் கடந்த 1978ல் பின்னலாடை ஏற்றுமதிக்கு முதல் அங்கீகாரம் கிடைத்தது. 85ம் ஆண்டில் ரூ.15 கோடி ஏற்றுமதி நடந்தது. இது ரூ.300 கோடி, ரூ.1,000 கோடி என உயர்ந்து அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.19,000 கோடியை அடைந்துள்ளது.
திருப்பூர், புறநகர் பகுதி அனைத்தும் சேர்ந்து தற்போது, ரூ.21,000ம் கோடிக்கு ஏற்றுமதி நடக்கிறது. இந்திய அளவில் 23 சதவீதம் அல்லது நான்கில் ஒரு பங்கு ஏற்றுமதி திருப்பூர் பகுதியில் இருந்து மட்டும் நடக்கிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி தற்போது சீராகி வருகிறது. திருப்பூர் ஏற்றுமதி இலக்கு ரூ.40,000 கோடி என நிர்ணயித்து, அடுத்த 5 ஆண்டில் இலக்கை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட வேண்டும்.
இளம் தொழில் முனைவோர் தங்களை தகுதிப்படுத்தி கொள்ள மத்திய அரசு துணை நிற்கும். அடுத்த ஆண்டு ஜவுளித் துறை மேம்பாடு தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் ஜவுளித் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 3 சதவீதமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது என்றா தயாநிதி.