இடைத்தேர்தல் பிரசாரம்-நாளையுடன் ஓய்கிறது
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான சட்டசபை இடைத் தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இதையடுத்து அங்கு பிரசாரம் களை கட்டியுள்ளது.
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 19ம் தேதி நடைபெறுகிறது.
இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, தேமுதிக ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளபோதிலும், திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி காணப்படுகிறது. வந்தவாசியை விட திருச்செந்தூர்தான் படு சூடாக காணப்படுகிறது.
திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக), அம்மன் நாராயணன் (அதிமுக), கோமதி கணேசன் (தேமுதிக) ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். மொத்த வேட்பாளர்கள் 25 பேர்.
வந்தவாசியில் திமுக சார்பில் கமலக்கண்ணன், அதிமுக சார்பில் முனுசாமி, தேமுதிக சார்பில் ஜனார்த்தன் ஆகியோர் களத்தில் உள்ளனர். மொத்தம் 14 பேர் போட்டியிடுகின்றனர்.
திருச்செந்தூரில் ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், கனிமொழி, அன்பழகன், விஜயகாந்த், தங்கபாலு உள்ளிட்டோர் பிரசாரம் செய்துள்ளனர்.
தமிழக அமைச்சர்கள் பெருமளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பிலும் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் குவிந்துள்ளனர். தொகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.
அதேபோல வந்தவாசியிலும் இன்றும் நாளையும் ஜெயலலிதா, பிரசாரம் செய்கிறார். மு.க.ஸ்டாலினும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். விஜயகாநத்தும் முகாமிட்டுள்ளார்.
நாளை மாலை 5 மணியுடன் அனல் பறக்கும் பிரசாரம் முடிவடைகிறது. 18ம் தேதி ஓய்வு நாளாகும். 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
23ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். சில மணி நேரங்களில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
வெளி நபர்கள் வெளியேற உத்தரவு:
பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவதையொட்டி வெளியூர்காரர்கள் அனைவரும் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு காட்டி வாக்களிக்க முடியாது:
இந் நிலையில் ரேஷன் கார்டுகளை அடையாள ஆவணமாகக் காட்டி வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஓட்டுப் பதிவு வீடியோவில் பதிவு:
இந் நிலையில் இடைத்தேர்தலில் ஓட்டுப் பதிவு வீடியோவில் பதிவு செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பாதுகாப்பு பணியில் 5 கம்பெனி கர்நாடக போலீசார், 6 கம்பெனி சி.ஆர்.பி.எப். படையினரும் ஈடுபடுத்தப்படுவர் என்றார்.