அருணா கொலை: சிறைக்கு திரும்பினார் எஸ்.ஏ.ராஜா!
பாளை: ஆலடி அருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வந்த தொழிலதிபர் எஸ்.ஏ.ராஜா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில், கடந்த 2004ம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவும் அவரது நண்பர் பொன்ராஜும் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ராஜா கல்வி நிறுவனங்கள் குழும தலைவரான எஸ்.ஏ.ராஜா, 'டாக்' ரவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் எஸ்.ஏ.ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ்.ஏ. ராஜா, கடந்த அக்டோபர் மாதம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இம்மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தனியார் மருத்துவமனையி்ல் 4 வாரங்கள் மட்டும் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தது.
சிகிச்சை பெறும் காலத்தில் தனது பாஸ்போர்ட்டை அவர், சிறை மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர்.
இதன்படி, தற்போது சிகிச்சைக்கான அனுமதிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் எஸ்.ஏ.ராஜா மருத்துவமனையில் இருந்து அழைத்து வரப்பட்டு மீண்டும் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.