வந்தவாசி- மந்தமாக ஆரம்பித்து விறுவிறுப்பான வாக்குப் பதிவு
வந்தவாசி: வந்தவாசி தொகுதியில் காலை முதலே மந்தமாக இருந்த வாக்குப் பதிவு பிற்பகலுக்கு மேல் சூடு பிடித்து விறுவிறுப்பாக முடிவடைந்தது.
காலையில் படு மோசமாக இருந்த வாக்குப் பதிவு பகலில் சூடுபிடித்தது. அங்கு பகல் 3 மணி நிலவரப்படி 63.9 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இங்கு 217 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டுப் பதிவு நடந்தது.
காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் 9 மணி வரை வெறும் 7 சதவீதமே வாக்குகள் பதிவாயின. 10 மணியளவில் வெறும் 11 சதவீத வாக்குகளே பதிவாகின.
இதனால் அனைத்து கட்சியினரும் கவலை அடைந்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம், போலீசாரின் கண்ணில் படாமல் வீடு வீடாக படியேறி ஐயா, அம்மா ஓட்டுப் போடப் போங்க என்று அனைத்துக் கட்சியினரும் கெஞ்ச ஆரம்பித்தனர்.
இதற்கு பலனும் கிடைத்தது. 11 மணிக்கு மேல் வாக்குப் பதிவு வேகமானது.
இங்குள்ள 217 வாக்குச் சாவடிகளும் பதட்டமானவை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது.
திருச்செந்தூரைப் போலவே இங்கும் 70 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாயிருக்கலாம் எனத் தெரிகிறது.