ஹேமலதாவின் கற்பழிப்பு புகார்: அடையாறு சாமியார் வாக்குமூலம்
சென்னை: ஹேமலதா என்ற பெண் கொடுத்துள்ள கற்பழிப்பு புகாரில், விசாரணைக்கு நேரில் ஆஜராக மறுத்த அடையாறு சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார், எழுத்து மூலம் தனது வாக்குமூலத்தை போலீசாருக்கு அனுப்பியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமலதா (30). சக்தி விலாஸ் மிஷன் என்ற ஆன்மீக அமைப்பின் நிறுவனரான ஈஸ்வர ஸ்ரீகுமார் என்ற சாமியார் மீது இவர் கடந்த செப்டம்பர் மாதம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதில், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாகவும், அதை வெளியில் சொன்னால் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி பல முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ஹேமலதாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், இவ்வழக்கு தொடர்பாக சாமியாரின் அடையாறு வீட்டு காவலாளி, கார் டிரைவர் ஆனந்தன் உள்பட 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது. தியாகராயநகரில் சாமியார் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பிலும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் கூறியிருந்தனர். ஆனால் நேற்று மாலை வரை அவர் போலீசில் ஆஜராகவில்லை.
'நான் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டுக்கு செல்ல மாட்டேன். நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்' என்று சாமியார் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
சில தினங்களாக தலைமறைவாக இருந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் திடீர் பயணமாக திருப்பதி சென்று யாகம் நடத்தி வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தனது வாக்குமூலத்தை ஒரு தாளில் எழுதி அதற்குரிய ஆதாரங்களையும் இணைத்து போலீசுக்கு சாமியார் அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.