கர்கரே, அசோக் காம்தே, சலஸ்கர் என யாரையும் நான் கொல்லவி்ல்லை - கசாப்
கசாப்பின் புரூடா வாக்குமூலம் தொடருகிறது. சில நாட்களுக்கு முன்பு கசாப் முதல் முறையாக தனி கோர்ட் நீதிபதி தஹிளியானி முன்பு வாக்குமூலம் அளித்தான். அப்போது நான் மும்பைக்கு சினிமாவில் சேருவதற்காகத்தான் வந்தேன்.
2008ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி இரவு என்னை போலீஸார் கைது செய்தனர். ஆனால் 26ம் தேதிதான் மும்பையில் தாக்குதல் நடந்தது. எனக்கும் அந்த தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை.
என்னைப் போல இருந்த ஒருவனை போலீஸார் சுட்டுக் கொன்று விட்டு என்னைப் பிடித்து வழக்குப் போட்டு விட்டனர் என்று கூறி அதிர வைத்தான்.
அதை விட உச்சகட்டமாக என்னை சில வெளிநாட்டினர் விசாரித்தனர். எப்.பி.ஐ அதிகாரிகள் என நினைக்கிறேன். அவர்களில் ஒருவர் டேவிட் கோல்மேன் ஹெட்லி என்றும் கூறினான் கசாப்.
இன்றும் தனி நீதிபதி முன்பு கசாப்பின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
அப்போது கசாப் கூறுகையில், நான் துப்பாக்கியால் சுட்டேன் என்ற கேள்விக்கே இடமில்லை. அப்படி இருக்கையில் நான் யாரையும் சுட்டுக் கொன்ற கேள்விக்கும் இடமில்லை.
சம்பவம் நடந்த இடத்திலேயே நான் இல்லை. சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, கிர்காம் செளபாத்தி என எங்குமே நான் இல்லை. ஏனென்றால் அந்த சமயத்தில் நான் ஏற்கனவே போலீஸ் வசம்தான் இருந்தேன்.
மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் என்னை குற்றப் பிரிவு போலீஸார் ஒரு போலீஸ் வாகனத்தில் என்னை அழைத்துச் சென்று தாக்குதல் நடந்த இடங்களை சுட்டிக் காட்டினர்.
நான் ஸ்கோடா காரில் தப்பி ஓடவும் இல்லை. கொல்லப்பட்ட அபு இஸ்மாயில் எனது கூட்டாளியும் இல்லை.
மும்பை போலீஸார் என்னை மயக்கத்தில் ஆழ்த்தி உடலில் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
போலீஸாருக்கு தேவை ஒரு குற்றவாளி. எனவே என்னைப் பிடித்து வழக்குப் போட்டுள்ளனர் என்றான் கசாப்.
கசாப் தொடர்ந்து கதை கதையாக அளந்து வருவதால் மும்பை வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.