திமுகவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இனி இடமில்லை? எழிலன் வீடியோவால் விவாதம்.. பின்னணி
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்துள்ளது. தோல்விக்கான காரணத்தை அறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் குழு அமைத்துள்ளார். இந்நிலையில் தான் திமுக நிர்வாகி டாக்டர் எழிலன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ விவாதத்தை கிளப்பி உள்ளது. அதோடு திமுகவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இடம் கொடுக்க கூடாது என்று அவர் கூறியுள்ளாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், திமுக நிர்வாகியுமான டாக்டர் எழிலன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். Course Correction - Step 1 என்ற கேப்ஷனில் அவர் தமிழ் திரைப்படத்தில் வெளியான நடிகர் சந்தானத்தின் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில் சந்தானம் ஒருவரிடம், 'வயது என்ன?'' என கேட்கிறார். அதற்கு இன்னொருவர், ''ஆடி வந்தால் 67 வரும்'' என்பார். அதற்கு சந்தானம், ''ஆடி வருவதற்குள் உன் பாடி வந்துவிடும் போல.. நீ இன்னும் இந்த சீட்டில் இருந்து தேய்த்து கொண்டிருக்கிறார். இனி இந்த கைரா நாட்டிற்குள் 60 வயதுக்கு மேற்பட்ட யாரும் இருக்க கூடாது'' என்பார். இந்த வீடியோ தான் தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
Course correction
— Ezhilan (@Dr_Ezhilan) May 17, 2026
Step 1 pic.twitter.com/17XC2Iwlh6
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்து ஆட்சியை விஜய்யின் தவெகவிடம் பறிகொடுத்துள்ளது. தோல்விக்கான பொறுப்பை திமுக தலைவர் முக ஸ்டாலின் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளார். தொகுதி வாரியாக மக்களிடையே பேசி, தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்த குழுவிற்கு உத்தரவு போட்டுள்ளார் முக ஸ்டாலின். அந்த கள ஆய்வு குழுவில் 35 பேர் இடம்பெற்றுள்ளனர். இப்படி திமுக தோல்விக்கான காரணம் பற்றி ஆராய்ந்து அதனை சரிசெய்ய முயலும் நிலையில் எழிலனின் இந்த பதிவு முக்கியத்துவம் பெறுகிறது. திமுகவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இனி இடம் வழங்க கூடாது என்பதை எழிலன் சொல்கிறாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த பதிவை செய்துள்ள எழிலன் கடந்த 2021ம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 71,867 வாக்குகள் வாங்கினார். அவர் பாஜக சார்பில் போட்டியிட்ட குஷ்புவை (பெற்ற வாக்குகள் 39,405) 31,462 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். அதன் பிறகு மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கினார். இந்த தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தவெக வேட்பாளர் ஜேசிடி பிரபாகர் 58965 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சபாநாயகர் ஆனார். திமுக வேட்பாளர் எழிலன் 43,824 வாக்குகள் வாங்கி 15,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications