சைப்ரஸில் நிலநடுக்கம்- சேதம் இல்லை
நிகோசியா: மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான சைப்ரஸில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5 புள்ளிகள் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
சைப்ரஸ் தலைநகர் நிகோசியா உள்ளிட்ட பகுதிகளில், குறிப்பாக உயரமான கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர். இங்குள்ள பாஃபோஸ் நகரில் இருந்து 145 கி.மீ தொலைவை மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச உதவியை நாடும் மலாவி:
இதற்கிடையே, மலாவியில் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க இங்குள்ள பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் சர்வதேச உதவியை நாடுகின்றனர்.
தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து 3 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்கள் மிசுசு மற்றும் இதர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தொடந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கரோங்கா மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் கரோங்கா மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 111 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளது. 3 ஆயிரத்து 565க்கும் மேற்பட்ட வீடுகள் குடியிருக்க முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நிலநடுக்கத்தால் மலாவியில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவி்த்த பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், 'இன்னும் பல ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் குடியிருக்க லாயக்கில்லாத அளவுக்கு பழுதாகியுள்ளன.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதிகளை சீரமைப்பதற்கு சர்வதேச நாடுகள் உதவ முன்வரவேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.
இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவியாக மலாவி தலைநகர் லிலாங்குவேயில் இருந்து ரெட்கிராஸ் அமைப்பினர் உதவிப் பொருட்களை அனுப்பிவருகின்றனர். எனினும் அவை போதவி்ல்லை என பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.