தெலுங்கானா: பிரதமர் என்ன சொல்லப் போகிறார்?
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரத்தை சுமூகமாகத் தீர்ப்பதற்காக தீர்வு ஒன்று அறிவிக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதைத் தொடர்ந்து அவர் சொல்லப் போகும் சுமூக தீர்வு என்ன என்பதை அறிய ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய மூன்று பகுதிகளைச் சேர்ந்த தலைவர்களும் பெரும் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
தெலுங்கானா தனி மாநிலமாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நள்ளிரவில் அறிவித்ததைத் தொடர்ந்து ஆந்திராவின் பிற பகுதிகளில் பெரும் போராட்டம் வெடித்தது.
தெலுங்கானாவை உருவாக்கக் கூடாது, ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று கோரி காங்கிரஸ், தெலுங்குதேசம், பிரஜா ராஜ்ஜியம் ஆகிய முக்கிய கட்சிகளைச் சேர்ந்த, தெலுங்கானா தவிர்த்த பகுதிகளைச் சேர்ந்த கட்சியினர் பெரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நிலைமை மோசமாகியதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் அனைவரும் ஏற்கும்படியான முடிவு ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
அவரது அறிவிப்பு வெளியாகி 2 நாட்களாகி விட்டது. எனவே எந்த நேரத்திலும் பிரதமரின் சுமூகத் தீர்வுத் திட்டம் வெளியாகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஆந்திராவின் அனைத்துப் பகுதியிலும் நிலவுகிறது.
ஆந்திராவின் மூன்று பிராந்தியங்களையும் (தெலுங்கானா, கடலோரப் பகுதிகள், ராயலசீமா) சேர்ந்தவர்களை சமாதானப்படுத்தும் வகையில் திருப்திப்படுத்தும் வகையில், மத்திய அரசும், பிரதமரும் என்ன தீர்வைச் சொல்லப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரின் புதிய திட்டத்திற்குப் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள ராயலசீமா, கடலோர ஆந்திரப் பகுதி தலைவர்களும், தெலுங்கானா தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications