ருசிகா கற்பழிப்பு வழக்கு-மாஜி டிஜிபி ரத்தோருக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
டெல்லி: ருசிகா கற்பழிக்கு வழக்கில் 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹரியானா மாநில முன்னாள் டிஜிபி எஸ்.பி.எஸ். ரத்தோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஏன் உங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களை திரும்பப் பெறக் கூடாது என்று கேட்டுள்ளது மத்திய அரசு.
ஹரியானாவைச் சேர்ந்த ருசிகா என்ற வளரும் டென்னிஸ் வீராங்கனை கடந்த 1990ம் ஆண்டு ரத்தோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டார். இதையடுத்து ருசிகா தற்கொலை செய்து கொண்டார்.
கிட்டத்தட்ட 19 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் சமீபத்தில் சண்டிகர் சிபிஐ கோர்ட் தீர்ப்பளித்தது. அதில் ரத்தோருக்கு வெறும் 6 மாத சிறைத் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ரத்தோரை தூக்கிலிட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் அவருக்கு பணியின்போது வழங்கப்பட்ட பதக்கங்களை திரும்பப் பெற வேண்டும். அவருக்குரிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும என்ற கோரிக்கைகளும் எழுந்தன.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் ரத்தோருக்கு ஒரு விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஏன் உங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களைத் திரும்பப் பெறக் கூடாது. ஓய்வூதியத்தைக் குறைக்கக் கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது.
கடந்த 1985ம் ஆண்டு சீரிய பணிக்காக ரத்தோருக்கு போலீஸ் பதக்கம் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் தேசிய அளவில் விருது எதையும் வாங்கவில்லை. அவர் குறித்து ஐபி உளவு அமைப்பு மத்திய அரசிடம் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து ரத்தோருக்கு தேசிய அளவில் எந்த விருதும் அளிக்கப்படவில்லை.
1965ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ரத்தோர் 2002ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
ருசிகா வழக்கை சீர்குலைத்து அதன் முக்கிய ஆதாரங்களை, அரசியல்வாதிகள் துணையுடன் அழித்தார். ருசிகா குடும்பத்தினரை மிரட்டினார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கை சிதறடித்தார் என்று ருசிகாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மோசடி:
இந்த நிலையில் ருசிகாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பெரும் மோசடி செய்யப்பட்டிருப்பதாக புதுப் புகாரைக் கூறியுள்ளார் ருசிகாவின் வழக்கறிஞர் பங்கஜ் பரத்வாஜ்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ருசிகாவின் பிரேதப் பரிசோதனையை திருத்தி, திரித்து மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும். ருசிகா குடும்பத்திற்கு மாநில அரசு உரிய நிவாரணத்தை அளிக்க வேண்டும்.
எவ்வளவு பணத்தைக் கொடுத்தாலும் ருசிகாவின் இழப்பை ஈடு கட்ட முடியாது. ஆனால் ருசிகாவின் குடும்பத்தினர் ரத்தோரால் பந்தாடப்பட்டுள்ளனர். ருசிகாவின் சகோதரர் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார். இதற்கெல்லாம் மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
இதற்கு ருசிகா குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை அரசு தர வேண்டும். அது நிவாரணத் தொகை என்று கூற முடியாது. மாறாக, அந்தக் குடும்பத்திற்கு அரசு செய்யும் உதவியாக அமைய வேண்டும்.
ருசிகாவின் குடும்பம் தற்போது பெரும் நிதிச் சிக்கலில் உள்ளது. ருசிகாவின் தந்தை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனவே அவர்களுக்கு அரசு உதவ வேண்டியது அவசியமாகும் என்றார்.
முதல்வரிடம் பிருந்தா காரத் கோரிக்கை:
இதற்கிடை சிபிஎம் தலைவர் பிருந்தா காரத், ருசிகாவின் தோழி ஆராதனாவின் தந்தை ஆனந்த் பிரகாஷ் ஆகியோர் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை சந்தித்துப் பேசினர்.
அப்போது ரத்தோரைக் காப்பாற்ற முயற்சித்த அரசியல்வாதிகள் யார் என்பதை அறிய சிபிஐ குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
பின்னர் பிருந்தா காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது கோரிக்கையை ஹூடா பொறுமையுடன் கேட்டார். உரிய சட்ட ஆலோசனைக்குப் பிறகு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ரத்தோர் உடனடியாக சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைக்கும் கூட ஹூடா ஆதரவு தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதிலும் ஹூடா உறுதியாக இருக்கிரார். நல்லது நடக்கும் என நம்புகிறேன் என்றார்.