ஆட்சியமைக்க சோரனுக்கு அழைப்பு - 30ம் தேதி முதல்வராக பதவியேற்பு

நடந்து முடிந்த ஜார்கண்ட் சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 81 இடங்கள் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி 25, பா.ஜ.க கூட்டணி 20, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 18 இடங்களில் வெற்றி பெற்றன.
சிபுசோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவுடன் தான் யாரும் ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
முதலில் காங்கிரஸ் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்காக சிபுசோரனுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், முதல்வர் பதவியை தனக்கு ஒதுக்கினால் மட்டுமே ஆதரவு என்பதி்ல் சிபுசோரன் உறுதியாக இருந்தார். மேலும், பல்வேறு ஊழல் வழக்கிலும், கொலை வழக்கிலும் சிக்கிய சிபுசோரனுடன் காங்கிரஸ் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இதற்காகவே காத்திருந்த பா.ஜ.க மின்னல் வேகத்தில் செயல்பட்டு சிபுசோரனை ஆதரிக்க முன்வந்தது. இதையடுத்து, ஆட்சி அமைக்க தேவையான அளவுக்கு எம்.எல்.ஏ.க்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சிபுசோரனுக்கு அனைத்தும் சாதகமாகின.
முதலில் 42 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கவர்னர் சங்கரநாராயணனை ராஜ்பவனில் சந்தித்து வழங்கினார் சிபுசோரன். தற்போது மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் சிபுசோரனுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
இதையடுத்து 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் கவர்னரை சிபுசோரன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை பெற்றுக்கொண்ட கவர்னர், சிபுசோரனை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க 41 எம்.எல்.ஏ.க்கள் போதுமானது. அது சோரன் வசம் உள்ளதைத் தொடர்ந்து கவர்னர் இம்முடிவை எடுத்துள்ளார்.
வரும் 30ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சிபுசோரன் முதல்வராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்.
தற்போது சோரனுக்கு ஆதரவாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் 18 எம்.எல்.ஏக்கள் தவிர, பா.ஜ.கவின் 18, ஜார்கண்ட் அனைத்து மாணவர் யூனியனின் 5, ஐக்கிய ஜனதா தளத்தின் 2, ஜே.ஜே.எம்மின் 1 என மொத்தம் 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
--












Click it and Unblock the Notifications