விடுமுறை நாளிலும் ஊனமுற்றவர்களிடம் லஞ்சம் வசூல்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலகத்தில், உதவித்தொகை அனுப்புவதற்கு லஞ்சம் வசூல் செய்த நான்கு ஊழியர்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை அலுவலகம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. நேற்று முகரம் பண்டிகையை முன்னிட்டு, அரசு விடுமுறையாகும்.
ஆனால், காலை 10 மணி முதல், மனவளர்ச்சி குன்றியோருக்கு, அரசு உதவித்தொகை அனுப்புவதற்கு, லஞ்ச வசூலில் ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாக, ரகசிய தகவல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்தது. இதனால், அங்கு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அலுவலகத்தில் முடநீக்கு தொழில் நுட்ப உதவியாளர் பிரகாஷ், தொழிற்கூட உதவியாளர் ராஜாமணி, பல்நோக்கு மறு வாழ்வு உதவியாளர் கருணாகரன், இரவுக் காவலர் பரமசிவம் ஆகியோரிடம், கணக்கில் வராத 58 ஆயிரம் ரூபாய் இருந்தது பற்றி, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு 60 சதவீதமும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் 500 ரூபாய் வீதம், அரசு உதவித் தெகை வழங்கி வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் 500 பேர் இந்த உதவித் தொகை பெற்று வந்தனர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, உதவித்தொகை வழங்கப்படவில்லை.
இந்த தொகையான 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. ஒரு நபருக்கு நான்கு ஆயிரத்து 500 வீதம், மணியார்டர் மூலம் அனுப்பபட வேண்டும். மேலும், புதிதாக இந்தாண்டுக்கு ஆயிரத்து 200 பேருக்கு உதவித்தொகை வழங்க அரசு அனுமதித்திருந்தது.
தனை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அனுப்ப வேண்டும். மணியார்டர் செய்வதற்கான கமிஷன் தொகை உட்பட அனைத்தும் அரசு வழங்கியுள்ளது.
உதவித்தொகை பெறக்கூடிய அனைவரையும் அலுவலகத்திற்கு நேரில் வர கோரி ஊழியர்கள் கடிதம்
அனுப்பி, நேரில் வந்த பயனாளிகளிடம் ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் லஞ்சம் வாங்கியுள்ளனர்.
இதன் பேரில் டிசம்பர் 26 ம் தேதி எழு நபர்களும், நேற்று 51 நபர்களிடம் தலா ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வசூலித்த பிரகாஷ், ராஜாமணி, கருணாகரன், பரமசிவம் ஆகிய நான்கு பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த லஞ்ச பணம் 58 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் அரசு தரும் பணத்தை வாயில் போட்டுள்ள இவர்களின் செயல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்படிப்பட்ட லஞ்சப் பேய்களிடமிருந்து மக்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கப் போகிறதோ..












Click it and Unblock the Notifications