அதிருப்தி அதிகரிப்பு: பல தவறுகளை செய்துவிட்டேன்-எதியூரப்பா

முதலில் ரெட்டி சகோதரர்கள் எதியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். 60 எம்எல்ஏக்களை தனியே திரட்டி தங்களது பலத்தை டெல்லியி்ல் காட்டிய அவர்கள் எதியூரப்பாவுக்கு நெருக்கமான அமைச்சர் ஷோபாவை பதவி நீக்க வைத்தனர். சபாநாயகராக இருந்த ஷெட்டாரை அமைச்சராக்கிக் காட்டினர்.
இந் நிலையில் ரெட்டிகளுடன் சேர்ந்து எதியூரப்பாவை எதிர்த்த எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் எம்எல்ஏ ரேணுகாச்சாரியா தலைமையில் தனி கோஷ்டியாக உருவாயினர்.
சுமார் 15 எம்எல்ஏக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரேணுகாச்சாரியா தனக்கு அமைச்சர் பதவி கேட்டு போர்க் கொடி உயர்த்தினார்.
இதையடுத்து கடந்த வாரம் அவரை அமைச்சராக்கினார் எதியூரப்பா. ஆனால், இதற்கு கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது பதவி ஏற்பு விழாவை சில அமைச்சர்கள், பல பெங்களூர் நகர எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.
மேலும் ரேணுகாச்சாரியா அமைச்சராக்கப்பட்டதால் தங்களுக்கும் அமைச்சர் பதவி தர வேண்டும் என்று மேலும் சில எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் கர்நாடக பாஜகவில் கட்டுப்பாடே இல்லாத நிலை உருவாகிவிட்டது. எதியூரப்பாவின் முழு நேரமும் கோஷ்டிகளை சமாளிப்பதிலேயே சரியாக உள்ளதால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயுள்ளது.
கட்சியில் எதிர்ப்பு அதிகரித்து வருவதால், எதியூரப்பாவின் முதல்வர் பசவிக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் எதியூரப்பா.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஆன பின் நான் பல தவறுகளை செய்துவிட்டேன். அதன்மூலம் பல பாடங்களை கற்றுக் கொண்டுவிட்டேன். மீண்டும் அதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என்று கர்நாடக மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்.
பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக நான் சமரசம் செய்து கொள்வதாக கூறுவது தவறு. கர்நாடக மாநிலம் மற்றும் மக்கள் நலனுக்கு எதிராக ஒருபோதும் நான் பதவியில் நீடிக்க மாட்டேன்.
ரேணுகாச்சார்யாவுக்கு அமைச்சர் பதவி வழங்கும் முடிவை நான்தான் எடுத்தேன். அதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன்.
அமைச்சர் பதவி வேண்டும் என பலர் கேட்டாலும் இப்போது அமைச்சரவை விஸ்தரிப்பு இல்லை. என் முன் இப்போது உள்ள ஒரே பணி பட்ஜெட் தயாரிப்புதான். இதுதொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளேன். பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து யோசிக்கப்படும் என்றார்.
எதிர்ப்பாளருடன் திருப்பதி கோயிலில் தரிசனம்:
இந் நிலையில் எதியூரப்பா ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு விமானத்தில் திருப்பதி சென்றார். அவருடன் அமைச்சர்கள் அசோக், கட்டா சுப்பிரமணிய நாயுடு, சட்டப்பேரவை உறுப்பினர் பேலூர் கோபாலகிருஷ்ணா ஆகியோரும் சென்றனர்.
நேற்று அதிகாலை வெங்கடாசலபதி கோயிலில் சுவாமியை தரிசனம் செய்த பின் பெங்களூர் திரும்பினார் எதியூரப்பா.
இந்த பேலூர் கோபாலகிருஷ்ணா முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக அதிருப்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் தான் அவரையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று வந்துள்ளார் எதியூரப்பா.












Click it and Unblock the Notifications